Friday, December 11, 2015

மறுபடி கன்யாகுமரிக்கு வாங்க! இங்கே இருந்து பார்க்கலாம்!

டிடியைத் தவிர வேறே யாரும் இங்கே வரலை. அதனால் பரவாயில்லை. நான் தொடர வேண்டியது தான் என நினைக்கிறேன். கொஞ்சம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். அதான் முடியமால் போகிறது. போகட்டும்!

கன்யாகுமரியைப் பத்திக் கடைசியா எழுதிட்டு இருந்தேன். இல்லையா? கன்யாகுமரியின் சில படங்களைப் போடுகிறேன் இங்கே. அங்கேயும் போட்டிருந்தாலும் இங்கேயும் பார்த்துக்கலாமே!ம்ம்ம்ம்! படங்களை ஆல்பத்திலேருந்து எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாப் போச்சு! அப்புறமா எப்படியோ ஒரு மாதிரியா எடுத்திருக்கேன். :)

முதல்முறை கன்யாகுமரி வந்தப்போ அங்கே கீழே தெரியும் மண்டபத்தில் இறங்கிப் பார்த்திருக்கோம். இப்போ அந்த வழி அடைக்கப்பட்டிருக்கிறது.


மண்டபத்திற்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள். இது சரியாகக் கோயிலில் அம்மன் குடியிருக்கும் இடத்துக்கு நேரே வரும். இங்கே ஒரு வாயில் உண்டு. இதன் வழியாகத் தான் அம்மனின் மூக்குத்தி ஒளிவிடுவதைப் பார்ப்பார்கள் எனச் சொல்வது உண்டு. இப்போது இந்த வாயில் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 



கோயிலின் கோபுரம் கொஞ்சம் தூரத்திலிருந்து! பக்கத்தில் தெரியும் மண்டபத்தின் வழியாகத் தான் நுழையணும்.

Sunday, November 29, 2015

இங்கே தொடரவா?

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகிறது இந்தப் பக்கத்துக்கு வந்து. சமையல் பதிவுகளையும், "எண்ணங்கள்" பக்கமே பகிர்வதால் இங்கே வரவே இல்லை. இனி கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்களை ஒதுக்கி வைக்கணும்னு எண்ணம். இப்படித் தான் கிறுக்குத் தனமா ஏதேனும் தோணும்!  சில சமயம் கணினியில் இருந்தே விலகி இருப்பேன். புத்தகங்கள் படித்துக் கொண்டு, தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டு என்று. நேற்றைய மின்வெட்டில் புத்தகங்களை அடுக்கலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ஒழுங்கு படுத்தினேன். அப்படி ஏதேனும் வேலையை ஏற்படுத்திக் கொள்ளணும். சும்மா உட்கார முடியாது! பல விஷயங்கள் ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது. எச்சில், பத்து பத்தி ஆரம்பிச்சேன். பாதியிலே இருக்கு! கல்யாணங்கள் குறித்த பதிவில் இன்னும் இரண்டோ, மூன்றோ போட்டால் முடிஞ்சிருக்கும்! அதுவும் சப்தபதியோட நிற்குது!

கொளஞ்சியப்பர் கோயில் பதிவும் பாதியிலே! கன்யாகுமரிப் பதிவும் பாதியிலே! இப்படி எல்லாமும் பாதியிலே நிறுத்திட்டு வேறே ஏதேனும் போடும்படியா ஆயிடுது! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்கள் பதிவுக்குப் போகாமல் இங்கேயே "என் பயணங்களில்" பக்கத்தில் அதை எல்லாம் நிறைவு செய்யலாமா என யோசனை! ஆரம்பத்திலிருந்தே பயணங்களை மட்டும் இங்கேயே எழுதி வந்திருக்கணும். இங்கே யாருமே வரதில்லைனு அங்கேயே எழுதப் போனால் நடு நடுவில் வேறே பதிவுகள் போடறாப்போல் ஆகிறது! :) இனி இங்கே சில நாட்களுக்கு எழுதலாம்னு எண்ணம். பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்குக் கணினியில் இருந்து விலகி நிற்கவும் விருப்பம். ஒரேயடியாக முடியாது தான். தனிப்பட்ட முறையில் வரும் மடல்களைப் பார்க்கவாவது வந்தாகணும். ஆனால் இந்தப் பதிவுகளை எழுதுவது, முகநூல் பக்கம், ஜி+ எல்லாத்தையும் ஓரம் கட்டலாம்னு நினைக்கிறேன்.  ஒரு மாதிரியான மனச்சோர்வு!  யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போன்றதொரு உணர்வு!

இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்க நினைக்கும் மனம்! வேறென்ன சொல்ல!