Sunday, October 28, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்-- பத்ராசலம் ராமதாஸர் !

வருமானம் இல்லாமல் வந்த விருந்தினர்க்கு உணவு படைத்துக் கொண்டே இருந்தால்
எத்தனை நாட்களுக்கு வரும்?  நாளாவட்டத்தில் கோபன்னாவின் வீட்டில் வறுமை
தாண்டவம் ஆடியது.  அடியார்களை உபசரிக்க முடியாமல் வருந்திய கோபன்னாவுக்கு
ஹைதராபாத் மன்னனான தானீஷாவின் அமைச்சரவையில் உயர்ந்த பதவிகள் வகித்த தனது
தாய் மாமன்களின் நினைவு வந்தது.  அவர்கள் மூலம் தானும் அரசாங்க வேலை
ஏதேனும் ஒன்றைப் பெற்று வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொண்டால்
வருங்காலத்துக்கு மட்டுமின்றி அடியார்களையும் தக்க முறையில் உபசரிக்கலாம்
என நினத்தார் கோபன்னா.  ஹைதராபாத் சென்று தன் மாமன்களான அக்கன்னா,
மாதன்னா இருவரையும் வணங்கித் தன் கோரிக்கையை முன் வைத்தார்.  தானீஷா
நல்லவனாக இருந்தாலும் பண விஷயத்தில் படு கஞ்சன் எனக் கூறிய மாமன்மார்கள்
வரி வசூல் போன்ற வேலைகளில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என
புத்திமதியும் கூறினார்கள்.  பின்னர் மறுநாள் தர்பாரிலே தங்கள் மருமகனை
அறிமுகம் செய்வித்து வந்த நோக்கத்தையும் தெரிவித்தனர்.  அப்போது
பத்ராசலம் தாலுகாவில் வேலை காலியாக இருந்ததால் தானீஷா உடனே அந்தத்
தாலுகாவின் தாசில்தாராக கோபன்னாவை நியமித்தார்.  கிஸ்தியை ஒழுங்காக
வசூலிக்க வேண்டும் எனக் கண்டிப்பாய்க் கூறி முத்திரையிட்ட கடிதமும்
கொடுத்து அனுப்பி வைத்தார்.

பத்ராசல க்ஷேத்திர மஹிமையையும், அங்குள்ள ஶ்ரீராமர் கோயிலின் புகழையும்
குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த ராமதாஸர் தனக்கு அளிக்கப்பட்ட
பல்லக்கில் ஏறி அந்த ஊரை அடைந்து, ஊருக்கு முன்னால் கீழே இறங்கி மலையை
வலம் வந்தார்.  கோயிலுக்குச் சென்று தன் குடும்பத்தோடு குடியிருந்த
ஶ்ரீசீதாராமரை, பரத, லக்ஷ்மண, சத்ருக்கன, ஆஞ்சநேயரோடு தரிசனமும்
செய்தார்.  புதிய தாசில்தாரைக் குறித்தும், அவர் கண்டிப்பைக் குறித்தும்
கவலையுற்றிருந்த பத்ராசலம் மக்கள் பக்திப் பரவசத்தோடு காட்சி அளித்த
இவரைப் பார்த்து மகிழ்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.  பதவி ஏற்ற நாள் முதல்
சிறப்பாகப் பதவிக்கு உரிய வேலைகளைத் தவறாது செய்துவந்தார் கோபன்னா.
குடிகளைத் தம்மிலிருந்து பிரித்து நினையாமல் இருந்து வந்ததால் எப்போதும்
ஊர் பாடல்,  ஆடல், பஜனை, வழிபாடுகள் எனக் கோலாகலமாக இருந்து வந்தது.
மக்களும் தவணை தவறாமல் கிஸ்தியைச் செலுத்தி வந்தனர்.  மற்ற தாலுகாவின்
தாசில்தார்களுக்கு எல்லாம் ஓர் நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார் கோபன்னா.

பத்ராசலம் கோயில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது.  அதற்குத்
திருப்பணி செய்ய வேண்டும் என நினைத்தார் கோபன்னா.  அதற்கு முன்னால் அதன்
பூர்வ சரித்திரம் என்ன என்பதை ஆராய்ந்தார்.  “தம்மக்கா என்னும் அந்தணப்
பெண் தன் மகளோடு இவ்வூரில் வாழ்ந்து வருகையிலே அவள் கனவிலே ஸ்ரீராமர்
தோன்றித் தாம் மலை மீது இருப்பதைச் சொல்ல, மலை ஏறிப் பார்த்தபோது ஒரு
புதரில் சீதாசமேத ஶ்ரீராமர், பரத, லக்ஷ்மண, சத்ருக்ன, அநுமனோடு காட்சி
கொடுத்தார்.  அவர்களுக்குக்கோயில் கட்டி இந்த விக்ரஹங்களைப் பிரதிஷ்டை
செய்ய வேண்டும் என நினைத்த தம்மக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினாள்.
நகரில் வாழ்ந்து வந்த பத்திர ரெட்டி என்பவரும், மற்றும் ஊராரும் பண உதவி
செய்ய, கோயில் வேலைகள் நடந்தன.  அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றோடு
ஸ்ரீராமர் அங்கே தன் குடும்பத்தோடு கோயில் கொண்டார்.  நாளடைவில் தம்மக்கா
ஶ்ரீராமரோடு ஐக்கியமானாள்.  பின்னர் ஒரு அரசன் ஏதோ திருப்பணி என்ற
பெயரில் செய்தான்.  ஆனால் இப்போதோ கோயில் முட்புதர்களும், செடிகொடிகளும்
மண்டி சுவற்றிலேயும் மரங்கள் வேரோட ஆரம்பித்துவிட்டிருந்தது.  இத்தகைய
நிலைமையைக் கண்ட கோபன்னாவுக்குக் கண்ணீர் வந்தது.

யோசித்தார்.  தானீஷாவுக்கு பத்ராசலம் தாலுகாவின் வசூல் என்பது ஒன்றும்
பெரிய விஷயம் அல்ல.  பத்ராசலம் அவன் ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதியே ஆகும்.
பார்க்கப் போனால் இது தானீஷாவே முன்னின்று ஏற்று நடத்தி இருக்க வேண்டிய
பணி.  இந்தக் கோயிலைச் சீர்திருத்திக் கட்டினால் எத்தனை மக்கள்
பயனுறுவார்கள்.  ஆகவே இதை நாமே ஏற்று நடத்திவிடலாம். என நினைத்தார்
கோபன்னா. உடனே தனக்கு உதவியாக  இருந்த கணக்கனிடம் வரிப்பணம் எவ்வளவு எனக்
கேட்க, அவன் ஆறு லக்ஷம் பொன் இருப்பதாய்த் தெரிவித்தான்.  கோயில்
திருப்பணிக்கு எவ்வளவு தேவை எனக் கணக்குப் போட்டால் ஆச்சரியவசமாக அதுவும்
ஆறு லக்ஷம் பொன்னாக இருந்தது.  கோபன்னா உடனே திருப்பணியை ஆரம்பிக்க அந்த
மலைப் பிரதேசத்தில்  உளியின் சப்தமும், ஆட்களின் கூக்குரலும்
சம்மட்டிகளின் ஓசையும் கேட்க ஆரம்பித்தது.  திருப்பணி வேலைகள் வெகு
சுறுசுறுப்பாக நடந்தது.  பல ஊர்களில் இருந்து சிற்பிகளும், ஆட்களும்
வந்து வேலை செய்தனர்.  மிகப் பிரம்மாண்டமாகக் கோயில் எழுந்தது.
தூண்களில் செதுக்க வேண்டிய சிற்பங்களைத் தெரிவு செய்தார் கோபன்னா.
அலங்கார மண்டபம், கர்பகிரஹம், பலிபீடங்கள், கொடிமரம், எல்லாம் உருவாகின.
ராமாயணக் கதையையே சிற்பங்களாக வடித்தார் ஒரு சிற்பி.

No comments:

Post a Comment