Tuesday, May 22, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!

ஆனால் இறைவன் தன் அடியார்களை ஒரு போதும் கைவிட மாட்டான் அல்லவோ!  கமலை ஞானப் பிரகாசருக்கும், அன்றிரவு, ஈசன் கனவில் வந்து, “ஞானப் பிரகாசா, நம் அன்பன் ஞானசம்பந்தன் நின்னை நாடி வருகின்றான்.  அவனுக்கு ஞானம் வழங்குவாயாக!” என்று கூறி மறைந்தார்.  ஆக குருவும் சீடனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  திருவாரூர் தியாகேசர் கோயிலின் உட்கோயிலான சித்தீசுவரத்தில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்து கொண்டு ஞானசம்பந்தரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  மதுரையிலிருந்து கிளம்பிய ஞானசம்பந்தர் திருவாரூரை அடைந்தார்.  முதலில் பெருமானை வழிபட வேண்டும் என எண்ணி அங்கு பெருமானை வழிபட்டு வலம் வரும் நேரத்தில் சித்தீசுவரத்தில் தமக்காக குருவானவர் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் காத்திருப்பதைக் கண்டு, குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

பின்னால் ஒரு ஆதீனத்தையே ஸ்தாபித்து குருமுதல்வராகப் போகும் தம் சீடனின் வரவுக்குக் காத்திருந்த குருவும் அவரை அங்கே வடக்கு நோக்கி அமரச் செய்தார்.  தாம் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவுக்கு முன்னிலையில் ஞானசம்பந்தருக்கு நயன, வாசக, ஸ்பரிச, அத்தமத்தகசையோக, திருவடி முதலான தீக்ஷைகளை வழங்கி ஞானோபதேசம் செய்து ஆட்கொண்டார்.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  குருஞான சம்பந்தரோ இளம் துறவி.  இருவருமாகத் திருவாரூரில் தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தனர்.  குருவின் அருகேயே இருந்து சேவைகள் செய்தும், பாடங்கள் கேட்டும், கற்றும் பல விதங்களில் தம் ஞானத்தை மேம்படுத்திக் கொண்டார் குரு ஞானசம்பந்தர்.  தினம் தினம் தியாகேசனின் அர்த்தஜாம வழிபாட்டை இருவருமாகச் சீடர்கள் புடை சூழச் சென்று கண்டு விட்டு வருவது வழக்கம். அவ்வாறே ஒரு நாள் அனைவரும் சென்று விட்டு கமலை ஞானப் பிரகாசரின் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

அன்றைய தினம் கைவிளக்கு எடுத்துக் கொண்டு கூட வரும் பணியாள் வரவில்லை.  அவனுக்குப் பதிலாக சீடர் ஞானசம்பந்தர் கைவிளக்கை எடுத்துக் கொண்டு குருவுக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு வந்தார்.  சிவதரிசனம் கண்ட பேரானந்த நிலையில் இருந்த ஞானப் பிரகாசர் தம் இல்லத்திலிருந்து கோயிலுக்குச் செல்கையிலோ, அல்லது திரும்பி இல்லம் செல்கையிலோ கை விளக்கு ஏந்தும் பணியாள் வரவில்லை;  அதற்குப் பதிலாக சீடன் குருஞானசம்பந்தர் கை விளக்கு ஏந்தி வருகிறார் என்பதை அறிந்தார் இல்லை.  ஆகவே கோயிலில் இருந்து இல்லத்திற்குத் திரும்பியதும், பணியாளை, “நில்” என்று சொல்லி அங்கேயே நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் வழக்கப்படி அன்றும், கை விளக்கு ஏந்தி வந்த ஞானசம்பந்தரை, “நில்” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.  பணியாள் தினமும் அதன் பின்னர் தன் வேலை முடிந்தது என விளக்கை சமாதானம் செய்துவிட்டு வீடு சென்றுவிடுவான்.  ஆனால் ஞானசம்பந்தரோ, “நில்” என குரு கூறியதைக் கட்டளையாகக் கொண்டு விடிய, விடிய அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

விளக்கில் இருந்த எண்ணெயெல்லாம் தீர்ந்து போயும் எண்ணெய் இல்லாமலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதோடு சோதனையாக அன்றிரவு பெருமழையும் பெய்தது.  கன மழை பெய்தும் ஞானசம்பந்தர் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே கை விளக்கோடு நின்று கொண்டிருந்தார்.  ஆஹா, என்ன ஆச்சரியம்!  ஞானசம்பந்தரின் மேல் மழைத்துளியும் படவில்லை.  அவர் உடல் மழையில் நனையவில்லை. விளக்கும் அணையவில்லை.  அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டாற்போல் அந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை.  அந்த இடத்து பூமியும் காய்ந்தே காணப்பட்டது.

No comments:

Post a Comment