Monday, January 23, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள்!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றி. இவரைக்குறித்து அறியாதோர் இருக்க மாட்டார்கள். என்றாலும் ஒரு தெரிந்து கொள்வோம். அந்நாட்களில் திருச்சி என அழைக்கப்படும் தலமான திரிசிரபுரத்தில் அதவத்தூர் என்னும் ஊரில் சைவ வேளாளக்குடும்பத்தில் சிதம்பரம் பிள்ளை என்னும் கணக்காயருக்கும், அன்னத்தாச்சி எனப்படும் அவர் மனைவிக்கும் ஓர் ஆண்மகவு பிறந்தது. 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் தோன்றிய இந்தக் குழந்தைக்கு மீனாக்ஷி சுந்தரம் என்னும் பெயர் வைத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். தக்க பருவம் வந்ததும் திருவாவடுதுறையைச் சார்ந்த வேலாயுத முனிவரிடம் தமிழ் இலக்கியங்களையும், சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமது பதினாறாம் பிராயத்திலேயே காவேரி ஆச்சியாரை மணந்து இல்லறத்தில் புகுந்தார். கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய பிள்ளையவர்கள், பல அறிஞர்களையும் நாடிக் கல்வி கற்றதோடு அல்லாமல், இரவில் பிச்சை எடுக்கும் இராப்பிச்சைக்காரனைக் கூட விடாமல் அவனிடமிருந்தும் பல பாடல்களைக் கற்றார். தண்டி அலங்காரத்தை இவ்வாறே தெருத்தெருவாக அலைந்து திரிந்த ஒரு பரதேசியிடம் கற்றார்.

மேலும் கல்வி கற்கும் ஆர்வத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார் பிள்ளையவர்கள். அப்போது 14-ஆம் பட்டம் குருமகா சந்நிதானமாக வேளூர் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார். அங்கே அம்பலவாண முனிவரிடம் சமய சாத்திர நூல்களைப் பயின்றதோடு தமக்குத் தெரிந்த தமிழை அங்கு இருந்த இளம் மாணாக்கர்களுக்குக் கற்றும் கொடுத்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்தபோது தான் திருவெண்ணீற்றுமை பி்ள்ளைத்தமிழ், சீகாழிக் கோவை, திருத்தில்லை யமக அந்தாதி போன்றவற்றை பிள்ளையவர்கள் இயற்றினார். இதைக் கண்ட ஆதீனத்தவர்கள் பிள்ளையவர்களுக்கு நுட்பமான தமிழ்ப்புலமை இருப்பதைக்கண்டு மகிழ்ந்து, அப்போதைய குரு மஹா சந்நிதானம் ஆன ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பெரும் வித்துவான்கள் நிறைந்த மஹாசபையில் “மஹாவித்துவான்” என்னும் பட்டத்தை அளித்துக்கெளரவித்தனர். சுப்பிரமணிய தேசிகர் காலத்தில் ஆதீனத்தொடர்பு கொண்ட பிள்ளையவர்கள் அவருக்குப் பின்னர் 15-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர் காலத்திலும், அதன் பின்னர் 16-ஆம் பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் காலத்திலும் தொடர்ந்து ஆதீன வித்துவானாகவே திகழ்ந்தார்.

சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிள்ளையவர்கள் பெரிய புராணத்தை நன்கு படித்து அறிந்து பிரசங்கங்கள் செய்வதில் வல்லவராக இருந்தார். இதைப் பார்த்த செட்டி நாட்டுச் செட்டியாரான வன்றொண்டச் செட்டியார் என்னும் ஒருவர் சேக்கிழார் மீது பிள்ளைத் தமிழ் பாடச் சொல்லிப் பிள்ளையவர்களிடம் விண்ணப்பிக்கப் பிள்ளையவர்களும் அவ்வாறே பாடினார். பிள்ளைத்தமிழ் என்பது புலவர்கள் தாம் விரும்பும் இறைவனையோ, அரசனையோ, வள்ளலையோ சிறு குழந்தையாகப் பாவித்துப் பாடுவதாகும். காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும், கடைசி மூன்று மட்டும் கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மாற்றத்தோடு பெண்பால் பிள்ளைத்தமிழாகவும் பாடப்படும். அவ்வாறே சேக்கிழாரைக் குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழோடு சேர்த்துப் பிள்ளையவர்கள் பத்துப் பிள்ளைத்தமிழ் பாடி உள்ளார்கள்.

காப்புப் பாடல்கள் பொதுவாக விநாயகர், அம்பிகை, ஈசன் போன்றோரைக்குறித்தே அமையும். ஆனால் பிள்ளையவர்கள் சேக்கிழார் பிள்ளைத்தமிழின் அமைப்பில் சற்றே மாறுபட்டு காப்புப் பருவத்தில் திருத்தொண்டத் தொகையில் கூறப்பட்டிருக்கும் அடியார்களையே காப்புக் கடவுளராகப் பாடி இருக்கிறார். அதே போல் அம்பலவாணர் பிள்ளைத்தமிழில் காப்புக்கடவுளராக அகச்சந்தானக் குரவர், புறச்சந்தானக் குரவர், இவர்கள் வழிவந்த குருமஹாசந்நிதானங்கள் ஆகியோரைக் குறித்துப் பாடி இருக்கிறார்.

சேக்கிழார் பிள்ளைத்தமிழின் காப்புப் பாடல்:

கார்கொண்ட சோலைசூழ் ஆருரர் ஓர்அரைக்
கால்நம்பி ஆரூரர்முக்
கால்அரைக் கால்ஆக முடிவுசெய் தருள்மாக்
கவித்திசையின் வீற்றிருக்கும்
ஏர்கொண்ட தில்லைமூ ஆயிரர்முன் வழுவரும்
எழுவரும் தழுவரும்எம
திதயம் தழால்கொண் டுறைந்திடச் செய்தவரை
எப்போதும் ஏத்தெடுப்பாம்
பார்கொண்ட தொண்டர்வர லாறுசொல் புராணம்அம்
பலவர்அரு ளால்அமைந்த
படிதெரித் திடஉலகெ லாம்எனும் சுருதிநாப்
பண்ணும்ஈற் றும்பொருத்திப்
பேர்கொண்ட சைவபரி பாடைஅறி வரியசம்
பிரதாயம் முதலியாவும்
பிறங்கத் தெரித்தெம்மை ஆண்டகுன் றத்தூர்ப்
பிரானைப் புரக்கஎன்றே

இது சேக்கிழார் பிள்ளைத் தமிழின் காப்புச் செய்யுளாகும். இதைத் தவிரவும் பிள்ளையவர்கள் திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றம்மை பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டா நாயகி பிள்ளைத்தமிழ், உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ். திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை அம்மைப் பிள்ளைத்தமிழ், திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ், திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் ஆகிய பிள்ளைத் தமிழ்ப்பாடல்களைப்பாடியுள்ளார்.

கீழுள்ள பாடல்கள் அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழின் காப்புப்பருவத்தின் பாடல்களில் முதல் பாடல் திருநந்தி தேவரையும் அடுத்தது சனற்குமாரர் நால்வரையும் குறிப்பிடுகிறது. இது தவிர சந்தானக் குரவர்கள், குருமஹாசந்நிதானங்கள் என அனைவரையும் காப்புப் பாடல்களில் பிள்ளையவர்கள் வாழ்த்திப்பாடி இருக்கின்றார்கள்.

பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் -
பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர்,
தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு -
தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம்,
பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே -
பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத்,
தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் -
செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(1)
சனற்குமாரமுனிவர் - வேறு.
838 எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ
னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர்
தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ்
சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா
மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த
வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற்
றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித்
திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.

No comments:

Post a Comment