Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

அதைக் கேட்ட சிவாசாரியார் விபரமாய்க்கூறும்படி கேட்க, செட்டியாரும் கூறலானார். வள்ளல் பெருமானின் தேகம் சுத்த தேகம் எனவும், உலோகத்துண்டு ஒன்றையோ அல்லது வெள்ளி நாணயம் ஒன்றையோ அவர் கையில் வைத்து மூடித் திறந்தால் அவை உருகி ஓடிவிடும் எனவும் அந்த அளவுக்கு அகச்சூடு உள்ளவர் வள்ளலார் எனவும் கூறிய செட்டியார், மேலே கூறினார். அப்படி இருந்தும் அவ்வளவு சூடும்போதாது எனக் கருதிய சமயங்களிலே சுவாமிகள் புறத்தே இப்படி தீச்சட்டிகளை வைத்த வண்ணம் புறச்சூட்டால் தமது அகச்சூட்டை பிரமதண்டிகா யோகம் செய்வதன் மூலம் அதிகப்படுத்திக்கொள்வதாய்த் தாம் நினைப்பதாய்க் கூறினார். சிவாசாரியாரும் அதை ஆமோதித்தார். மேலும் செட்டியாரிடம் தமக்கு நெருப்புத்துண்டுகள் உடலில் பட்டதுமே தீப்புண்கள் ஏற்பட்டன எனவும், சுவாமிகளுக்கோ எதுவும் நடக்கவில்லை என்பதையும் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டார்.



அதை ஆமோதித்த செட்டியாரும் இதிலிருந்து என்ன தெரிகிறதெனில் சுவாமிகளின் திருமேனியே கனல்மேனியாகும் எனவும், அந்தக் கனல் சாதாரணக் கனல் அல்லவென்றும், ஞானக்கனல் எனவும், கூறினார். மேலும் அத்தகையதொரு ஞானக் கனலை இந்தச் சாதாரண தீக்கனலால் என்ன செய்ய முடியும்? எதுவும் முடியாது. அதனாலேயே சுவாமிகளைத் தீ எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. காற்று, புவி, ககனம், புனல், அனல் என எதனாலும் அழியாத திருமேனி சுவாமிகளின் திருமேனி என பரவசம் மீதூறக் கூறினார். சிவாசாரியாரும் கண்ணீர் பொங்க அதை ஆமோதித்தார். செட்டியார் மேலும் இறைவன் ஒருநாள் மாலை ஒரே நாழிகையிலே யோகநிலையை சுவாமிகளுக்கு உணர்த்தி மறுநாளே யோகப்பயனையும் அளித்ததாகவும் கூறிவிட்டு, இதைச் சுவாமிகள் தம் பாடல் ஒன்றின் மூலம் தெரியப் படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டார். “ஒரு நாழிகையில் யோகநிலையை யுணர்த்தி, மாலையே, யோகப்பயனை முழுதும் அளித்தாய்! எனத் திருவருட்பாவில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.



நம்மைப் போன்ற சாமானியர்களின் சிற்றறிவிற்கு எட்டமுடியாத இந்த விஷயங்களை நம் காலத்தில் நாம் பார்த்து மகிழக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனப் பேசிக்கொண்டனர் இருவரும். அதன் மேல் சிவாசாரியார் ஜோதிவழிபாட்டுக்கு தருமச்சாலைக்குப் போவதாய்க் கூறிக்கொண்டு கிளம்பினார். சிலநாட்களின் தருமச்சாலையை ஒட்டி சமரச வேதபாடசாலை ஒன்றையும் சுவாமிகள் ஏற்படுத்தி சன்மார்க்கப் பாடங்களைக் கற்பித்து அதன்படி நடக்கும் இளைஞர்களுக்கு பயிற்சிக்காலத்திலும் அதன் பின்னரும் தக்க பொருளுதவி செய்யப் போவதாயும் அறிவித்தார். இளைஞர்கள் பதினைந்து வயதுக்குள் இருக்கவேண்டும் எனவும், நல்லொழுக்கம், கடவுள் பக்தி, ஜீவகாருண்யம், பொதுத் தொண்டு செய்வதில் விருப்பம் உள்ளவர்களாய் இருத்தல், உண்மையே உரைத்தல், ஐம்புலன்களையும் அடக்கி ஆள்தலில் விருப்பம் உள்ளவர்கள், இன்சொல்லே பேசுதல், அனைவருக்கும் உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுதல் போன்ற நற்பண்பு நிறைந்தவர்களாய் இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்தார்.



அனைவருமே இந்தத் திட்டத்தை வரவேற்றதோடு மாணாக்கர்களுக்குப்பொருளுதவி செய்வது எல்லாருமே செய்வதுதான். ஆனால் அவர்தம் குடும்பத்திற்கும் சேர்த்து உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வள்ளலாரைத் தவிர வேறு யாருக்கும் தோன்றாது என வியந்து பாராட்டினர். இப்படிப் பயின்ற மாணவர்களை நாடெங்கும் அனுப்பி சன்மார்க்கத்தைப் பரப்புவதே சுவாமிகளின் குறிக்கோள் எனவும் புரிந்து கொண்டனர். தருமச்சாலையில் ஒருநாள் வேலூரில் இருந்து ஆனந்தநாத சண்முகசரணாலய சுவாமிகள் வந்திருந்தார். அவர் வள்ளலாரோடு நெருங்கிய தொடர்புடையவர். அது குறித்த சிந்தனைகளில் மூழ்கி இருந்தவரை சித்திவளாக மாளிகையில் இருந்து வேலாயுத முதலியார் காண வந்தார். அவரைக் கண்டு வணங்கிய வேலாயுத முதலியாரை வரவேற்ற சரணாலய சுவாமிகள் வள்ளல் பெருமானைத் தரிசித்து பலநாட்களாகிவிட்டதாயும், தருமச்சாலைக்கு முன்போல் ஏன் வருவதில்லை எனவும் விசாரித்தார்.



அதற்கு வேலாயுத முதலியார் பெருமான் சன்மார்க்க சங்கம்தோற்றுவிக்க விரும்பிய காலத்திலேயே அதைச் சார்ந்த ஒளித்திருக்கோயில் கட்ட வேண்டும் என விரும்பியதாகவும், அதற்கென இப்போது கோயில் அமைப்புப் படம் ஒன்றைத் தம் கரத்தால் வரைந்து வைத்திருப்பதாயும், அது புதிய கட்டிட அமைப்பாகவும், வெகு அருமையாகவும், அற்புதமாகவும் இருக்கிறதாயும் கூறினார். கலா வல்லவராகிய சுவாமிகள் கட்டிடக் கலையிலும் வல்லவராக இருக்கிறதைக் கண்டு இருவரும் வியந்து பேசிக்கொண்டனர். பின்னர் வேலாயுத முதலியார் சரணாலய சுவாமிகளிடம் அவர் வந்த விஷயம் குறித்து விசாரித்தார். தமக்கும் சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்ததாய்க் கூறினார் சுவாமிகள். அது குறித்துத் தமக்கு எதுவும் அதிகம் தெரியாது எனவும், தெரியாத விஷயங்களைச் சொல்லும்படியும் வேலாயுத முதலியார் கேட்டுக்கொண்டார். அனைத்துமே முதலியார் அறியாத விஷயங்களே எனக் கூறின சரணாலய சுவாமிகள் மேலே பேசினார்.



வள்ளல்பெருமானிடம் சரணாலய சுவாமிகள் ஒருமுறை தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி வள்ளல் பெருமானின் செய்யுட்களிலும் சில கருத்து விளங்காது மயக்குகின்ற சொற்றொடர்களைக் காண்பதாகவும், வழுக்களையும் காண்பதாகவும் முறையிட்டதாகக் கூறினார். அதற்கு வள்ளலார் ஒரு சில இடங்களில் நால்வர் பெருமக்கள் வழுவியிருப்பதாகவும் இவ்வழுக்கள் விசாரத்தாலும், சிவாநுபவ மேலீட்டாலும் தற்செயலாக ஏற்பட்டவை என்றும் கூறினார். பின்னர் திருவருட்பாவில் உள்ள மயக்குகின்ற சொற்றொடர்களைக் குறித்து விளக்கம் தந்தார் சுவாமிகள். சுவாமிகள் சரணாலய சுவாமிகளிடம் தாம் எழுதிய திருவருட்பாவில் அளவிறந்த குற்றங்கள் இருப்பதாயும், விசாரவசத்தால் தவறுகள் ஏற்பட்டதாயும், இறைவன் தமது பெருங்கருணையால் அனைத்தையும் மன்னித்ததாயும், மற்றவர்களும் அவ்வாறே மன்னித்தல் வேண்டும் எனவும், தாம் புழுவினும் சிறியேன் எனவும் இது குறித்து மிகவும் நாணுவதாயும் மிகத் தாழ்மையுடன் கூறினார்.



இதைக் கேட்டுக்கொண்டே வந்த வேலாயுத முதலியார் தாம் முன்னர் ஒருமுறை பெருமானைச் சோதித்தது குறித்து நினைந்து நாணம் மிகக் கொண்டார். பின்னர் மேலே சரணாலய சுவாமிகள் பேசியதைக் கேட்கத் தொடங்கினார். அகர உயிர்க்கு நாற்பத்தைந்து வினாக்களைக் கூறிய சுவாமிகள் ஓரு எழுத்திற்கே பற்பல இலக்கண நியாய விசார வினாக்கள் உள்ளது எனில் தம் போன்றோர் எவ்விதம் அவ்வினாக்களுக்கு விடை தோற்றுவிக்க முடியும்?? கற்றோம் என்ற செருக்கை முழுதும் விடுத்து விசார வசத்தவராகிச் சிவன் திருவருளையே சிந்தித்து இருக்க வேண்டும் என்று என்னையோரு பொருளாகக் கருதிக் கூறியருளினார் சுவாமிகள். இதைக் கேட்ட சரணாலய சுவாமிகள் கற்றலில் செருக்கடைதல் பொருந்தாது என்னும் பேருண்மையைத் தாம் சுவாமிகளின் பேச்சால் உணர்ந்து கொண்டதாயும் தெரிவித்தார். அப்போது வேலாயுத முதலியார் இந்தப் பேருண்மையை சுவாமிகள் மட்டும் உணரவில்லை எனவும் அதை முதலில் தாம் உணர்ந்து கொண்டதாகவும் அதன் பின்னர் கணக்கில் அவதானி தேவிபட்டினம் முத்துசாமிப் பிள்ளை எனவும் அதன் பின்னர் புதுச்சேரி தந்தி அலுவலக மேலாளர் பிநாகபாணி முதலியார் எனவும் தெரிவித்தார். ஆகவே நாம் அனைவருமே பெருமானின் அருளால் வித்வத் கர்வம் அடங்கியவர்களே என்று கூறினார்.



வேலாயுத முதலியார் வள்ளலார் இளமையில் முப்பதாண்டுகள் சென்னையில் வித்துவானாக விளங்கி வந்தது அப்படியே தொடர்ந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து இரண்டு தமிழறிஞர்கள் தமக்குள் பேசிக்கொண்டதைக் கூற ஆரம்பித்தார். மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஒரு சமயம் ஆறுமுக நாவலரிடம் பேசிக்கொண்டிருந்த போது வள்ளலார் மட்டும் துறவறம் ஏற்காமல் தொடர்ந்து நாவலர் வித்துவான் போன்ற பெயர்களை ஏற்றிருந்தால் தாமும் சரி, ஆறுமுக நாவலரும் சரி முறையே இலக்கிய வித்துவான் எனவும் இலக்கண வித்துவான் எனவும் பெயர் கிடைத்திருக்காது என்று கூறினாராம். அம்மாதிரி இல்லாமல் வள்ளலார் துறவறம் ஏற்றதாலேயே அவர்களால் இலக்கண, இலக்கிய வித்துவான்களாகப் பரிமளிக்க முடிந்தது என்றாராம். அதன் மேல் சரணாலயர் மேலும் பேசத் தொடங்கினார்.

No comments:

Post a Comment