Saturday, September 24, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

மண்டபத்தை அடுத்துள்ள திருச்சபை மண்டபத்தின் மேற்புறம் பளபளவென ஜொலிக்கும் வெள்ளி ஒளியோடு விளங்குவதுதான் சிற்சபை எனச் சொல்லப்படும் வெள்ளியம்பலமாகும். கீழ்ப்புறம் அதே அமைப்பில் பொன்னிறத்தில் விளங்குவது கனகசபை எனப்படும் பொன்னம்பலம் ஆகும். இவற்றுக்கு வடக்கே தென்புறமாய்த் திகழ்வது சத்திய ஞானசபையாகும். ஞானசபைக்கு மூன்று கண்ணாடிக்கதவுகள் உண்டு. அவை சூரியன், சந்திரன்,அக்கினி ஆகியவற்றைக்குறிக்கும். இவற்றை அடைய அமைக்கப்பட்ட ஐந்து படிகளும் “சிவாய நம” என்னும் பஞ்சாக்ஷரத்தைக்குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சாக்ஷரத்தைக் குறிக்கும் திருவருட்பா பாடல் பின்வருமாறு:



பெற்றதாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே!” என்று பாடியுள்ளார் வள்ளல் பெருமான்.



சத்திய ஞான சபையின் பிரகாரத்தில் பதினான்கு சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நமது சைவ சித்தாந்த சாத்திரங்களைக் குறிக்கும். சபையின் உள் அமைப்பில் கண்டால், உள்ளே அமைந்துள்ள பனிரண்டு தூண்களும் மெய்கண்டாரின் சிவஞானபோதத்தில் அருளியுள்ள பனிரண்டு சூத்திரங்களைக்குறிக்கும். உள்ளே அதிட்டான பீடத்திற்கு நடுவே உள்ள நாற்கால் மண்டபம் ஜோதி ஞானபீடம் என அழைக்கப்படும். அப்பீடத்துக்கு நான்கு படிகள் உள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் ஞான பாதங்கள் நான்கைக் குறிப்பன. அதன் வடதிசையில் உள்ள ஒங்கார வளைவுக்கு நடுவே உள்ள ஞானவெளியில் தான் ஆண்டவன் அருட்பெரும் சோதியாக விளங்குகிறான்.



“அருட்பெரும் சோதி என் ஆருயிரில் கலந்தாடுகின்ற

அருட்பெரும் சோதி என் அன்பிற் கலந்தறிவாய் விளங்கும்

அருட்பெரும் சோதித்தெள்ளார் அமுதாகி உள் அண்ணிக்கின்ற

அருட்பெரும் சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே.”



இந்த அருட்பெரும் சோதியை மறைத்தவண்ணம் தொங்கும் வண்ணத் திரைகள் ஏழாகும். ஏனெனில் ஆண்டவனைக் காணவிடாமல் ஆன்மாவைத் தடுப்பவை மாயாசக்திகள். இவை ஏழு சக்திகளாகும். அவை மாயாசத்தி, கிரியாசத்தி, பராசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, ஆதிசத்தி, சிற்சத்தி என்னும் ஏழாகும். அவை ஏழுக்கும் முறையே கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை நிறம், கலப்பு நிறங்களில் திரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஏழு திரைகளும் விலகியதும் பிரணவ வடிவான வட்டத்தினுள்ளே ஞானபீடத்தின்மீது அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிப்பதைக் காணலாம்.



கரைவின்மா மாயைக் கரும்பெருந்திரையால்

அரைசதுமறைக்கும் அருட்பெரும் சோதி

பெருறு நீலப்பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெரும்சோதி

பச்சைத்திரையால் பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெரும் சோதி

செம்மைத்திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

பொன்மைத்திரையால் பொருளுறு வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

வெண்மைத்திரையால் மெய்ப்பதிவெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

கலப்புத்திரையால் கருதனுபவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெரும்சோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடர்புற மறைக்கும் அருட்பெரும்சோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்

அத்திறம் மறைக்கும் அருட்பெரும்சோதி

திரைமறைப்பெல்லாம் தீர்த்தாங்காங்கே

அரைசுறக் காட்டும் அருட்பெரும்சோதி

தோற்றமா மாயைத் தொடர்பறுத்தருளின்

ஆற்றலைக் காட்டும் அருட்பெரும் சோதி.”

No comments:

Post a Comment