Sunday, July 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

கருங்குழி. அங்கிருந்த களத்துமேட்டுத் திடலின் அரசமரத்தடியில் சன்மார்க்க சங்கத்து அன்பர்கள், பொதுமக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரே நின்றிருந்தார் வள்ளலார். அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்பது புரிந்து அனைவரும் பணிவோடும், கவனத்துடனும் காத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார் வள்ளலார் பெருமான். “கருணைத் தெய்வமான ஆண்டவனுக்கு அந்ந்த கோடி வணக்கங்கள். சன்மார்க்க அன்பர்களே, பொதுமக்களே, சில நாட்களாக என்னுள் ஒரு விஷயம் குறித்துத் தீவிர சிந்தனை ஏற்பட்டு அதற்கெனத் திட்டமிட்ட்தன் காரணமாக இன்று இங்கே இந்த சபையிலே உங்களை எல்லாம் அழைத்தேன். என் அழைப்பை ஏற்று எல்லாரும் வந்திருக்கிறீர்கள். இது கடவுளின் அருளாணையினாலேயே நடந்த்து. இவ்வளவு காலம் பல ஊர்களுக்கும் சென்று வந்து பார்த்து அறிந்து கொண்ட ஒரு விஷயம் என்னுள் சொல்லொணா வேதனையில் ஆழ்த்துகிறது. அந்த வருத்த்த்தை நீக்குவதற்காகவே உங்கள் ஒத்துழைப்பை நாடி இன்று உங்களை இங்கே வரவழைத்தேன்.” வள்ளலார் பேச்சை நிறுத்தினார்.



அனைவரும் திட்டம் என்னவென்று சொல்லுங்கள், செயலாக்குவோம் என ஒருமித்த குரலில் கூற வள்ளலாரும் மேலே சொல்ல ஆரம்பித்தார். “ பசி எல்லா உயிருக்கும் ஏற்படுகிறது. அது பொதுவானது. மிக மிக்க் கொடியது. கொடியனவற்றுள் எல்லாம் மிக்க் கொடியது பசியே. துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணமும் பசியே. பசி இல்லை எனில் துன்பமும் இல்லை. கொடிய இப்பசித் தீயினால் வரும் அவஸ்தைகள் சொல்லி முடியாது. இந்தப் பசியானது ஏழைகள் வயிற்றில் பெரு நெருப்பாக எரியும்பொது அவர்களுக்கு உரிய நேரத்தில் ஆகாரத்தை அளித்து அவிக்கிறது தான் ஜீவகாருண்யம் ஆகும். இந்தப் பசியாகிய விஷக்காற்று ஏழைகளின் அறிவான விளக்கையே அணைத்து விடுகிறது. அதை மீண்டும் ஏற்றவேண்டுமானால் அவர்களுக்குத் தகுந்த நேரத்தில் உணவு அளித்து அறிவாகிய விளக்கு அணையாமல் ஏற்றவேண்டும். இவ்வுடம்பாகிய ஆலயம் இயற்கையான கடவுள் விளக்கத்திற்கு ஏற்ற இடம். இவ்வாலயத்தைப் பசியினால் பாழாக்க்க் கூடாது. ஆகாரம் கொடுத்து அவ்வாலயத்தை விளக்கம் செய்விக்கவேண்டும். இதுவே உண்மையான ஜீவகாருண்யம்.”



அங்கிருந்த கல்பட்டு ஐயா மனம் உருகியது. “சத்தியம், சத்தியம் சுவாமி, சத்தியம்” என்றார். ஆமாம் என ஆமோதித்த வள்ளலார், ஒரு அருமையான பாடலைப் பாடினார்.

“எட்டரும்பொருளே திருச்சிற்றம்பலத்தே

இலகிய இறைவனே உலகில்

பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்

பரதவிக்கின்றனர் என்றே

ஒட்டிய பிறரால் கேட்ட போதெல்லாம்

உளம்பகீர் என நடுக்குற்றேன்

இட்ட இவ்வுலகில் பசி எனில் எந்தாய்

என்னுளம் நடுங்குவதியல்பே!” என்று கல்லும் கசிந்து உருகும் வண்ணம் பாடினார் வள்ளலார் பெருமான். அவர் கண்களில் இருந்து ஏழைகளின் துயரத்தை நினைந்து பாடிய மாத்திரத்தில் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடியது. அதைக் கண்ட அனைவரும் சுவாமிகள் உடம்பெல்லாம் நடுங்க கண்ணீர் ஆறாய்ப் பெருக இவ்விதம் துன்பம் அடைகிறாரே! இவர்தம் துன்ப நிலையைக் காணச் சகிக்கவில்லையே. என்று அவர்களும் அழ ஆரம்பித்தனர். கல்பட்டு ஐயா பாவம் செய்துவிட்டோமே என்று புலம்பினார்.



தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்ட வள்ளலார், கூட்ட்த்தினரையும் சமாதானம் செய்தார். பின்னர் மேலே பேச ஆரம்பித்தார். “கொடிய பசியைத் தீர்க்கும் பொருட்டு ஓர் அன்ன சத்திரத்தை, அதாவது சத்திய தருமச் சாலையை நிறுவ நினைப்பதாயும் அதற்கெனக் கட்டிடம் கட்ட் ஓர் இடம் தேவைப்படுவதாயும் கூறி நிறுத்தினார். உடனே அனைவரும் தர்மசாலைக்கட்டிடம் எங்கே கட்ட விரும்புகிறார் என வள்ளலாரைக் கேட்டார்கள். வள்ளலார் அதற்கு தருமசாலை திருவதிகை, திருமுதுகுன்றம், திருப்பாதிரிப் புலியூர், திருச்சிற்றம்பலம், திருக்கூடலையாற்றூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே, தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய நதிகள் சூழப் பெற்று வடற்பெருவெளியாய் போவோர் வருவோர் அனைவருக்கும் பசிதீர்க்கப் போதியதாய் அமைய விரும்புவதாய்த் தெரிவித்தார். அத்தகைய இடம் ஒன்றை தாம் ஏற்கெனவே பார்த்துத் தேர்ந்தெடுத்திருப்பதாயும் கூறினார். அதை விலைக்கு வாங்கிவிடலாம் என அனைவரும் பேசிக்கொள்ள, சுவாமிகளோ, அதற்கு அவசியம் இல்லை என்றார். அனைவரும் வியப்பாய்ப் பார்க்க சுவாமிகள் மேலும் பேசினார்:



கருங்குழியில் இருந்து மூன்று கல் தொலைவில் இருக்கும் வடலூர் என்னும் பார்வதிபுரம் கிராமத்தின் வடக்கே வெட்டவெளியாய் ஒரு பெருவெளி இருப்பதாயும், அங்கேயே தர்மசாலை கட்ட நினைப்பதாயும் கூறினார். சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் பெரிய பாட்டைக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்திலிருந்து விருத்தாசலம் போகிற பாட்டைக்கும் நடுவில் அந்த இடம் அமைந்துள்ளதால் ஓரு முக்கியமான இடமாக இருக்கும் என்றும் தர்மசாலை கட்டுவதற்கேற்ற ஞானபூமியும் அதுவே என்றும் கூறினார். அந்த இடம் பார்வதிபுரம் மக்களுக்குச் சொந்தமானது எனவும், அருள் உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அவ்வூர் மக்கள், நாம் கேட்டால் தர்ம காரியத்திற்கு என அந்த இட்த்தை இனாம் சாசனம் செய்து கொடுப்பார்கள் எனத் தாம் நம்புவதாயும் கூறினார்.



மேலும் மறுநாளே தம் நேரில் சென்று அக்கிராமத்து மக்களைப்பார்த்துப் பேசி முடிவு செய்து கொண்டு வரப் போவதாயும் கூறினார். அனைவரும் இதற்கு ஒத்துக்கொண்டு, சிலர் தாங்களும் சுவாமிகளோடு உடன் செல்ல வேண்டுகோள் விடுக்க சுவாமிகள் ஒப்புதல் அளித்தார். அவ்வளவில் சபை கலைந்த்து.



1867-ம் ஆண்டு, பிரபவ ஆண்டு, வைகாசித்திங்கள், பதினோராம் நாளன்று பார்வதிபுரம் என்னும் வடலூர் விழாக்கோலம் பூண்டு காட்சி அளித்த்து. ஆம், அன்றுதான் தர்மசாலை திறப்பு விழா. சன்மார்க்க சங்கத்தினருக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணவளிக்கப் போகும் ஓர் தரும சாலை. எல்லா வீடுகளும், சாலைகளும், மாவிலைத் தோரணங்களாலும், பன்ங்குருத்துத் தோரணங்களாலும் வாழைக்கன்றுகளாலும்,தென்னை குருத்தோலைகளாலும் அலங்கரிக்கப் பட்டுக் காட்சி அளித்த்து. ஒரு மண் கட்டிடம் எளிமையாக்க் கட்டப் பட்டு அலங்கரிக்கப் பட்டிருந்த்து. ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க உள்ளே சமையலறையில் உணவு தயாராகிக்கொண்டிருந்த்து. கட்ட்ட்த்தின் எதிரே தென்ன்ங்கீற்றுப் பந்தல் போடப் பட்டு மேடை போடப் பட்டிருந்த்து. சன்மார்க்க சங்கச் சாதுக்கள், துறவிகள், தர்மசாலையின் சம்பந்திகள்,. அணுக்கத் தொண்டர்கள், ஊர் மக்கள், பணியாளர்கள், என ஆயிரக்கணக்கானோர் பந்தலில் அமர்ந்திருந்தனர்.



விழா தொடங்கியது.

No comments:

Post a Comment