Friday, January 7, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருப்பள்ளி எழுச்சி மூன்றாம் பாடல்:

கூவின பூங்குயில்கூவினகோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்= அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கத்தும். அப்படி திருப்பெருந்துறையிலும் குயில்கள் கூவ, கோழிகள் கூவ, மற்றப் பறவைகளும், நாரைகளும் ஒலி எழுப்ப, கோயில்களிலும் வீடுகளிலும் எம்பெருமானின் வழிபாடலுக்கான சங்கங்கள் ஆர்ப்பரித்தன.


ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்=விண்ணிலே நக்ஷத்திரங்களின் ஒளி மங்கிக்கொண்டு உதய காலத்து அருணோதயத்தைத் தொடர்ந்து சூரியனின் ஒளி பரவத் தொடங்குகிறது. இந்நிலையில் இவ்வுலக வாழ்க்கையில் பற்றும், பாசமும் கொண்டிருந்த எங்களுக்கு உன்னிடம் விருப்பமும், பக்தியும் ஏற்பட்டிருக்கிறது, எங்கள் ஈசனே.


தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= திருப்பெருந்துறையில் உறையும் எங்கள் ஈசனே, சிவனே, எங்களின் இந்த பக்தியைக் கண்டு எங்கள் மேல் அன்பு பூண்டு எம்மை ஆட்கொள்ள உன் திருவடித் தாமரைகளை எங்களுக்குக் காட்ட மாட்டாயா? உன்னை எங்கள் ஐம்பொறிகளாலும், அறிவாலும், மனத்தாலும் ஆழ்ந்து அநுபவிக்க முடியாது. அருள் அநுபவம் பெற்றாலே அநுபவித்து உணர முடியும். அத்தகைய அநுபவத்தை எங்களுக்குக் கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாய்.

யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.= அனைவராலும் அறிய முடியாதவனே, ஆனால் உன் அடியார்கள் மட்டுமே அறியக் கூடிய தன்மை கொண்டவனே, எமக்கு என்றும் எளியவனாக இருப்பவனே, இறை அருள் அநுபவம் இல்லை எனில் உன்னை அறிவது எங்கனம்?? பக்குவம் அடைந்த ஆன்மாக்களால் மட்டுமே இறைவனை அறியவும் உணரவும் முடியும். மாணிக்க வாசகர் உணர்ந்து அறிந்திருந்தார்.

No comments:

Post a Comment