Thursday, January 6, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருப்பள்ளி எழுச்சி இரண்டாம் பாடல்


அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்
அகன்றது உதயநின்மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே!

அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்
அகன்றது= இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி. அந்தக் கீழ்வானில் உதயசூரியன் வரும்முன்னர் தோன்றும் செவ்வானம் அருணோதயம் உண்டாகிவிட்டது. இருள் அகன்றது ஒளி பிறந்தது. இங்கே மனமாகிய ஆகாயத்தில் இறைவனின் சோதிவடிவாகிய உதயத்தைக் கண்டதும், மனதின் மாசாகிய இருள் நீங்கி மனம் அந்த சோதி வடிவான ஒளியால் நிறைந்தது எனக் கொள்ளலாம்.


உதயநின்மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்= ஈசனின் திருமுகம் ஒரு தாமரை மலர் போல் தோன்றுகிறது. அதிலிருந்து அவன் அருளெல்லாம் கருணை எல்லாம் சோதிவடிவான சூரியன் போல் பிரகாசமாய் எழுகிறது. அவனுடைய கருணையாகிய பிரகாசத்தின் காரணமாய் அவன் அருட்பார்வை பார்க்கும் கண்மலர்கள் மெல்ல மெல்ல விரிந்து மலர்கின்றன. அவனுடைய கண்ணின் கருமணிகள் தெரியும் வண்ணம் மலர்ந்து தெரிகின்றன அந்தக் கண்கள்.

திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= அந்தக் கண்மணிகளைப் பார்த்தால் வண்டுகள் எனத் தோன்றுகின்றன. மலர்களில் ரீங்காரம் செய்யும் வண்டுகள் அந்தக் கண்மணிகளைத் தங்கள் வண்டினம் என நினைக்கின்றன. அந்தக் கருவண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றுவது இனிய கீதம் இசைப்பதைப் போல் இருக்கிறது. ஈசனின் கண்களை வணங்க வந்த அடியார்களும், தேவாதிதேவர்களும் பாடும் பாமாலைகளைப் போல் அவை விளங்குகின்றன. திருப்பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானே,


அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே!= என் ஈசனே, எங்களுக்கெல்லாம் அருளாகிய பெரும் நிதியைத் தரவரும் ஆனந்த மலையே, கைலையில் நவரத்தினங்களும், குபேர பண்டாரமும் இருப்பதாக ஐதீகம். கைலை சென்றால் அவை கிடைக்கும், ஆனாலும் அவையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும், ஆனால் ஈசனிடமோ அருளாகிய நிதி எடுக்க எடுக்கக் குறையாவண்ணம் கொட்டிக்கிடக்கிறது. அடியார்களுக்கு அவன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான். அனைவருக்கும் சொல்லவொண்ணாப் பேரின்பம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment