Wednesday, January 5, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

திருப்பள்ளி எழுச்சி முதல் பாடல்

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளி எழுச்சி திருப்பெருந்துறையில் பாடியவை. திருப்பெருந்துறை நீர் வளமும், நில வளமும் பொருந்திய ஓர் ஊராகும். அங்குள்ள ஈசனைக்குறித்துப் பாடிய இப்பாடல்கள் மாணிக்கவாசகர் தம் உள்ளத்துள்ளே உறையும் இறைவனை உள்ளத்திலே பள்ளி எழுந்தருளச் செய்து பின் அவனோடு ஒன்றிணைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எனக் கூறுவார்கள்.

வளம் பொருந்திய திருப்பெருந்துறை வயல்களில் செந்தாமரை மலர்ந்து குலுங்குகிறாப் போல் நம் உள்ளத்தாமரையும் ஈசனின் எல்லை இல்லாப்பெருங்கருணையால் மலர்ந்து கொள்கிறது.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு= என் வாழ்க்கையின் அடிப்படையே ஈசனாகிய பரம்பொருளே ஆகும். அத்தகைய பரம்பொருளே உனக்குப் போறி. நின் திருவடித் தாமரையைத் தொழுது கொள்கிறேன். அதிலே அருமையான பூங்கழல்களால் அர்ச்சிக்கிறேன். இப்போது இருள் நீங்கிப் பொழுது புலரும் வேளை ஆகிவிட்டது.

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்= என் ஐயனே, உன் திருமுகதரிசனமும், அதில் விளங்கும் குறுமுறுவலும் எமக்குச் செய்யும் அருளை என்னென்று கூறுவது? உன் திருவடி நாதம் பிரணவநாத ஒலியன்றோ?? அத்தகைய நாதம் ஒலிக்க வீரக் கழல்களைத் தாங்கி நிற்கும் உன் திருவடித் துணை எங்களுக்கு எப்போதும் வேண்டும். அத்தகைய திருவடியை நாங்கள் தொழுது ஏத்துகிறோம்.


சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= தாமரை மலருவது சேற்றிலே ஆனாலும் அது சேற்றை விட்டு மேலே எழும்பி நிற்கும். தனித்துத் தெரியும், சேறு மட்டுமில்லாமல் அந்தக் குளத்து நீரும் அதில் ஒட்டாது. அவ்வாறே இவ்வுலகவாழ்க்கையில் பற்றில்லாமல் ஈசனிடம் கொண்ட பக்தியையே எந்நேரமும் நினைந்து திருப்பெருந்துறையாகிய இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் ஈசனை வழிபடுகிறோம். இங்கே தாமரை மலர்வது நம்முள்ளே மனத்தாமரை உள்ளே இருக்கும் அருட்பெரும்சோதியைக் கண்டு மலருவதைச் சுட்டுகிறது. சேறு என்பது நம் மனதில் தோன்றும் இவ்வுலகத்துப் பற்றுடைய எண்ணங்களைக் குறிக்கும். அத்தகைய சேறு நிறைந்த எண்ணங்களையும் மீறிக்கொண்டு ஈசனிடம் வைத்த பக்தியானது மலர்ந்து தாமரை மலர் போல் முகம் காட்டிச் சிரிக்கிறது.

ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!=எருது பொறுமைக்குப் பெயர் போனது. எவ்வளவு பாரமானாலும் தாங்கிக்கொள்ளும். எவ்வளவு துன்பமானாலும் தாங்கிக்கொள்ளும். அத்தகைய எருதைத் தனக்குக் கொடியாகவும், வாகனமாயும் கொண்டுள்ள ஈசனோ அவன் தன்மையையும், உண்மையையும் சொல்லி முடியுமா? அவன் நம்மையும் ஆட்கொண்டுவிட்டானே. ஆகவே நம்முள்ளே உள்ள ஜோதிவடிவான ஈசன் எழுந்தருளத் திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.

No comments:

Post a Comment