Saturday, January 1, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குண் கருங்குழலில் நம்தாஆஅம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப்பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப்படி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

கொங்கண் கருங்குழலி நம் தம்மைக்கோதாட்டி= இங்கே குளத்திற்கு வந்து எல்லாரும் நீராட ஆரம்பிச்சும் ஒரு பெண்ணுக்கு நீராட மனசில்லை. குளிருகிறது. திரும்பிண்டு நிற்கிறாள் போலும். அவளையும் அழைத்து தாமரை மலர்கள் நிறைந்த இந்தப் புனலில் குதித்துக் குளிக்க ஆரம்பித்துவிடு, பின்னர் குளிரே தெரியாது என்பது தான் கருத்து. பக்தியாகிய கடலில் மூழ்கினால் நம் பாவங்கள் ஆகிய குளிர் நம்மை விட்டு விலகும்.

செங்கண் அவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்= செந்தாமரை போன்ற செவ்வரி ஓடிய கண்களைக்கொண்ட திருமாலாகட்டும், ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு முகமாய் நான்கு முகங்களை உடைய நான்முகனாகட்டும், மற்ற தேவாதிதேவர்களாகட்டும் இவர்கள் எவரிடமும் இல்லாத வாறு

எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்= உள்ள ஒப்பற்ற பேரின்பம் நம்மை நாடி, நம்மைத் தேடி வருமாறு

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்= இந்நிலவுலகில் இங்கே நம்முடைய ஒவ்வொருத்தர் வீடுகளிலும் எழுந்தருளி,
ஈசன் வீதியுலா வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பான வழிபாடு நடத்துவார்கள், அதையும் சொல்லலாம். ஒவ்வொருத்தர் மனக்கோயிலிலும் ஈசன் இருப்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். நாம் எவ்வளவு சிறியோர்களாக இருந்தாலும் நமக்காக நாம் உய்யும் பொருட்டு நம்மை ஆட்கொள்ள வேண்டி ஈசன் இறங்கி வருகிறான்.

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை= அவனுடைய செந்தாமரையைஇ ஒத்த பொற்பாதங்களின் நிழலை நமக்குத் தரும்படியாக நமக்கு நாம் ஏவிய ஏவலைச் செய்யும் சேவகனாக

அங்கண் அரசை அடியோங்கட்குஆரமுதை= அனைத்து உலகுக்கும், அரசனாக விளங்குபவனை. அவனைத் தொழுது ஏத்தும் சிவனடியார்களுக்குக் கிடைத்தற்கரிய பேரமுதாக விளங்குபவனை

நங்கள் பெருமானைப்பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனாகிய, எங்கள் தலைவனாகிய பெருமானைப் பாடித் தொழுது நமக்கு மட்டுமல்லாமல், இவ்வுலகத்தினர் அனைவருக்கும் நலமும், நன்மையும் திகழும் வண்ணம் அவனைத் தொழுவோம். அதற்கு முன் தாமரைப்பூக்கள் நிறைந்த இந்தப் பூங்குளத்தில் துளைத்து விளையாடிக் குளிக்கலாம்.

நம் மனதில் ஈசனை இறுத்தி பக்தியாகிய கடலில் மூழ்கித் துதித்தால் ஈசன் நம்மை ஆட்கொள்ளுவான்.

No comments:

Post a Comment