Saturday, December 25, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

"முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்ப்பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப்பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.

முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே= இவ்வுலகம் தோன்றியதற்கெல்லாம் கால நிர்ணயம் செய்கின்றனர். மற்ற வேத, வேதாந்தங்களுக்கு, காவியங்களுக்கு அனைத்துக்குமே ஒருவாறு கால நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் ஈசன் எப்போது தோன்றினான்? தோற்றுவித்தவர் யார்? அவன் இருப்பைக்கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றே சொல்லலாம். அத்தகைய கால நிர்ணயமே செய்ய முடியாத காலத்துக்கும் முன்னே தோன்றிய மிகப் பழைய, ஆதியான பொருளே, அவன் தான் ஈசன்,

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே= பின்னால் எத்தனையோ புதுமைகள் தோன்றின. தோன்றுகின்றன, தோன்றவும் தோன்றும். ஆனால் இவை எதுவுமே முன்னால் இல்லைனு சொல்ல முடியுமா? இல்லைஅல்லவா? ஏற்கெனவே இருந்த ஒன்றைத் தான் நாம் கண்டு பிடிக்கிறோம். புதுமை எனச் சொல்கிறோம். அத்தகைய புதுமைகளுக்கும் புதியவனாக இனி வரும் சமூகமும் காணவேண்டிய புதிய இளையவனாக ஈசன் இருக்கிறான். ஏனெனில் அவன் இல்லை எனக் கூறுபவர்களும் அவனை உணர வைக்கும் தன்மை கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே இல்லை என்ற மறுப்பும் தோன்றுகிறது. இந்த வாதம் புதியது போல் இன்று பேசப்பட்டாலும் அநாதிகாலந்தொட்டே இவையும் பேசப்படுகிறது. ஆகவே புதுமை என்றாலும் மீண்டும் மீண்டும் அதே தன்மை, பொருள் கொண்டவையாகவே இருக்கிறது. அத்தகைய தன்மை உள்ளவன் ஈசன்.

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம்= அப்பா, உன்னை எங்கள் தலைவனாய்ப் பெற்ற நாங்கள் உன்னை எவர் தலைவராய் நினைந்து வணங்குகிறாரோ அத்தகைய சிறப்பான அடியார்களையே அவர்கள் திருவடிகளையே பணிந்து ஏத்துவோம்.

ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார்= அவர்களுக்கே நாங்கள் உரிமை உள்ளவர்கள் ஆவோம். அப்படிப்பட்ட சிவனடியார்களையே தேடித்தேடி எங்கள் கணவராக்கிக்கொள்வோம்.

அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்= அவ்வடியார்கள் தங்கள் மனம் மகிழ்ந்து சொன்ன ஆணைகளையே நாங்கள் அவர்களுக்குச் சேவகர்களாய் இருந்து நிறைவேற்றித் தருவோம்.

இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனே எமக்கு எம் அரசனாகிய நீர் இவ்வண்ணம் அருள் புரியும்படி கேட்டுக்கொள்கிறோம். அத்தகைய அருள் பெற்றாலே நாங்கள் எக்குறையும் இல்லாதவராய் வாழ்வோம்.

No comments:

Post a Comment