Wednesday, December 29, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப்புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதார் குழையாடப்பைம்பூண் கலனாடக்= காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடவும், கழுத்தில் அணிந்திருக்கும் மற்ற அணிகலன்கள் ஆடவும்,

கோதை குழலாட வண்டின் குழாமாடச்= அழகிய பெண்களின் நீண்ட குழல் விரிந்து பரந்து ஊஞ்சல் ஆடுவதைப் போல் ஆடவும், அப்போது அந்தக் கூந்தலில் அந்தப் பெண்கள் சூடி இருக்கும் மலர்களும் சேர்ந்து ஆடவும் அதைக் கண்ட வண்டுகளின் கூட்டம் அந்தப் பூக்களின் தேனை மாந்தும் நோக்கத்தோடு ர்ரூம்ம்ம்ம்ம் என ரீங்காரமிட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வரவும்

சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி= இந்த அழகிய தண்மையான குளிர்ந்த நீரில் மூழ்கி நாமும் ஆடுவோம். அதுமட்டுமா? ஆடும்போது அந்தச் சிற்றம்பலத்தானைக் குறித்துப் பாடி ஆடுவோம்.

வேதப் பொருள்பாடி அப்பொருளாமாபாடிச் = வேதங்களின் பொருளாகவே அமைந்த அந்த சர்வேசனின் புகழைப் பாடி, அவர்தம் பெருமைகளைப் புகழ்ந்து கூறும் பாடல்களைப் பாடி, அனைத்துக்கும் அவனே காரணமும், காரியமுமாய் அமைந்ததைக் குறித்து வியந்து பாடுவோம்.

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி= இறைவன் சோதி வடிவானவன். அத்தகையவனின் சோதியின் திறம் பற்றி நம்மால் இயன்றவரை எடுத்துப் பாடுவோம் அவன் சூடும் கொன்றாஇ மலர்களால் ஆன மாலையைப்பாடுவோம்

ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்= ஆதியும் அவனே, அந்தமும் அவனே, அவனே முதலும், முடிவும் அவனே. இதையும் நாம் உணர்ந்து பாடுவோம்.

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்= நம் ஒவ்வொருவரின்கர்ம வினைக்கேற்றவாறும், இயல்புக்கேற்றவாறும் நம்மை வகைப்படுத்தி, வேறுபடுத்தி நம்மை வளர்த்து ஆளாக்கும் அன்னை , அவள் கைகளின் வளையல்களும் ஆட,

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.= அவள் திருவடிகளின் பெருமையையும் புகழ்ந்து பாடி ஆடுவோமாக.

இங்கே மாணிக்க வாசகர் தில்லையில் இடைவிடாது ஆடிக்கொண்டே தன் கூத்தின் மூலம் இவ்வுலகை ஆட்டி வைக்கும், இயக்கும் நடராஜப் பெருமானின் ஆட்டத்தையும், அதன் உள்ளார்ந்த தத்துவத்தையும் குறித்துப் பாடுகிறார். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் இவ்வுலகம் இயங்குவதையும் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment