Monday, January 18, 2010

தாம்பரத்தை நோக்கிய பயணத்தில் 2

தேனுபுரீஸ்வரர் கோயில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் அவனுக்கு முதல் மந்திரியாய் இருந்த அநிருத்த பிரமாதி ராயரால் கட்டப் பட்டது. ஹிஹிஹி, பொன்னியின் செல்வனில் வருவாரே?? நம்ம ஆழ்வார்க்கடியானோட குருவே தாங்க! கஜப்ருஷ்ட விமானம். கற்றளியாகவே கட்டப் பட்டிருக்கிறது. ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்துள்ளது. கபில முனிவர் சகரனின் மக்களைச் சபிச்ச கதை, அதனால் அவங்க எல்லாரும் எரிஞ்சு சாம்பலானது, அவங்களுக்கு முக்தி கொடுக்க பகீரதன் கங்கையைக் கொண்டுவந்ததுனு எல்லாம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். சகர புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடரவே பகீரதன் கங்கையைக் கொண்டு வர நேர்ந்தது. தனது கோபத்தினால் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு மனம் வருந்திய கபில முனிவர் தாமும் சிவ பூஜை செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ள நினைத்தார். இடக்கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு வலக்கையால் மலர்களைத் தூவி அர்ச்சிக்க, ஈசன் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு சொல்ல, மணலில் வைக்க மனமில்லை என மறுக்கிறார் கபிலர். லிங்கத்தைக் கையில் வைத்து வழிபட்ட முறை சரியல்ல என்று சொல்லி அவரைப் பசுவாகப்பிறக்கச் செய்தார். பசுவாகப் பிறந்த கபிலர் தன் கொம்புகளால் மணலில் புதையுண்டு கிடந்த லிங்கத்தைத் தேடி எடுத்து வழிபட்டதாகவும், அதன் பின்னரே கபிலருக்கு முக்தி கிடைத்ததாகவும் வரலாறு. பின்னர் இந்தப் பகுதியை ஆண்ட மன்னனால் கோயில் எழுப்பப் பட்டு அதன் பின்னர் அநிருத்த பிரமராயரால் கஜப்ருஷ்ட விமானத்தில் எழுந்தருளினார் தேனுபுரீஸ்வரர்.

கையில் வைத்து வழிபட்ட லிங்கம் என்பதாலோ என்னமோ மூலஸ்தானத்தில் லிங்கம் மிகச் சிறியது. ஒரு சாண் உயரம் தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. பீடம் சதுர வடிவம். சந்நிதிக்கு இடப்பக்கம் கபிலர் இடக்கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட வண்ணம் காட்சி கொடுக்கிறார். அதே தூணின் மற்றொரு பக்கம், பூவராஹர் காட்சி கொடுக்கிறார். மடியில் ஸ்ரீ, சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடை உடுத்தி அமர்ந்திருக்கிறாள். ஈசனை வழிபடும் பெருமாளையும் காணமுடியும். இங்கே முருகன் யானை மீது அமர்ந்த வண்ணம் இடக்கையில் சேவலை ஏந்திக் காட்சி கொடுக்கிறார். பைரவர் மனைவியுடன் காட்சி கொடுக்கிறார்.

முக்கியமான விசேஷம் இங்கே பின்னாட்களில் , பிற்காலச் சோழர் காலத்தில் சாளுக்கிய சம்பந்தத்தின் காரணமாய் சரப வழிபாடு ஆரம்பித்து இன்று வரை நடந்து வருவதே. இந்தக் கோயிலில் உள்ள சரபரை மிகவும் சிறப்பாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் தூண்களே சிற்பங்கள் நிறைந்தவையே. ஆனாலும் படம் எடுக்க அநுமதி இல்லை. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சரபர் சந்நிதியில் ராகு காலத்தில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். சரபருக்கு எனத் தனி உற்சவரும் இருப்பதாய்ச் சொன்னார்கள். பார்க்க முடியலை. கூட்டம் இருந்தது. கோயில் அமைப்பைப் பார்த்தாலே ஆயிரம் வருஷங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப் புரிகிறது. பிராகாரம் சுற்றும்போதே நம்ம ரங்க்ஸ் அட, கஜப்ருஷ்ட விமானம், பாருனு சொன்னார். அப்புறம் தான் கவனிச்சேன் விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைக்கப் பட்டிருக்கிறது. தக்ஷிணாமூர்த்தியும் மனைவியோடு காட்சி கொடுக்கிறார். தனி சந்நிதி தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் இருக்கிறார். துர்கையோ கையில் கிளி கொஞ்ச காட்சி கொடுத்தாள்.

தூணில் மட்டுமல்லாமல் தனியாகவும் வடுக பைரவர் இருக்கிறார். வடுக பைரவருக்கு திராட்சை மாலை போடுகிறார்கள். இங்கே காட்சி கொடுக்கும் பிரம்மாவிற்கு ஐந்து முகங்களைப் பார்க்க முடியும். சீதா, ராமரும் அனுமன் வணங்கும் கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி ஏதோ மண்டபம் போன்ற அமைப்பு இருப்பதாய்ச் சொல்கிறார்கள். அது பற்றி சரியாய்த் தெரியவில்லை. கிட்டே போய்ப் பார்க்கணும். முடியவில்லை. பலவிதமான சிற்ப அதிசயங்கள் நிறைந்துள்ள கோயில். கோயிலுக்குப் பெரிய குளம். குளக்கரையில் சுற்றி அனைவரும் வீடு கட்டிக் கொண்டு குடி இருப்பதைப் பார்த்தால் அங்கேயே போய் விடவேண்டும் போல் இருக்கு. அவ்வளவு அருமையான இயற்கைச் சூழல். எதிரே வெட்டவெளி. வயல்கள். அதைத் தாண்டினால், கிழக்குக் கடற்கரைச் சாலை, நீலாங்கரை செல்லும் சாலை, மஹாபலிபுரம் செல்லும் சாலை எல்லாம் வரும் என்றும், பாண்டிச்சேரி அங்கே இருந்து மிக அருகே இருப்பதாயும் சொன்னார்கள்.

நகரின் சந்தடியை விட்டுத் தள்ளி ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்தாலும் கோயிலுக்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டு தானிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாலையில் கூட்டம் நிறைய இருக்கும் என்றும் சொன்னார்கள். கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கோயிலின் படம் தேடுகிறேன். கிடைச்சால் போடுகிறேன். அங்கே இருந்து எதிரே இருக்கும் தெருவில் வலப்பக்கம் திரும்பி நடந்தால் பதினெட்டு சித்தர்கள் இருக்கும் பீடம். அது பற்றிய தகவல்கள், நாளை.

4 comments:

  1. படங்கள் எடுப்பது முற்றிலும் தடை! :(( என்ன செய்யறது???

    ReplyDelete
  2. @geethamadam

    http://images.google.co.in/images?hl=en&resnum=0&q=thenupureeswarar&um=1&ie=UTF-8&sa=N&tab=wi

    try this link for pics

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete