Friday, September 26, 2008

சித்திரம் பேசுதடி! மினி தாஜ்மஹால்!

அடுத்து நாம் காணப் போவது பீபி கா மக்பரா என்ற பெயரில் அழைக்கப்படும் மினி தாஜ்மஹால். ஒளரங்கசீபின் மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தாஜ்மஹாலில் கட்டடக் கலை அமைப்பை அப்படியே பிரதி எடுத்துக் கட்டப் பட்டுள்ளது. இதைக் கட்டியது ஒளரங்கசீப் என்று சிலரும், ஒளரங்கசீபின் மகன் தன் தாயின் நினைவில் கட்டியது என உள்ளூர் மக்களும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் கட்டப் பட்டது ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் என்பது சந்தேகம் இல்லை. 1679-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் ஒளரங்கசீபின் மனைவி ரபியா-உத்-துரானி என்பவரின் நினைவுச்சின்னம். இது தாஜ்மஹாலின் ஒரு மோசமான நினைவுச்சின்னம் என்று பொதுவாகச் சொல்லப் படுகின்றது. வெளிப்பாகத்தின் அமைப்பு தாஜ்மஹாலை ஒத்திருந்தாலும், அதைப் போல் வெள்ளை மார்பிளால் இது முழுதும் கட்டப்படவில்லை. மேலே உள்ள குவிந்த கூரை போன்ற அமைப்பு மார்பிளில் உள்ளது. ஆனால் அதன் சுவர்கள் (ப்ளாஸ்டர்) சுண்ணாம்புப் பூச்சு வேலைகளாலேயே செய்யப்பட்டுள்ளது. உள்ளே எண்கோணவடிவில் உள்ள மார்பிள் சாளரம் காணப்படுகின்றது.

இது எந்தவிதத்திலும் தாஜ்மஹாலோடு ஒப்புநோக்கும் வகையில் இல்லை என்றே சொல்லவேண்டும். என்னோட கருத்து தாஜ்மஹாலை விடவும், ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் பில்வாடா சமணக் கோயிலின் வேலைப்பாடுகள் காணக் கிடைக்காத ஒன்று என்று சொல்லலாம். இங்கேயும் உள்ளே நுழையும் இடத்தில் இருபக்கமும் செயற்கைத் தடாகமும், பாதைகளும் காணக் கிடைக்கின்றன. தாஜ்மஹாலைப் பிரதி எடுத்திருக்கும் ஒரு கட்டிடம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அதற்கு ஈடு என்று சொல்ல முடியாது.

அடுத்து நாம் காணப் போவது தண்ணீரில் ஓடும் மாவு அரைக்கும் மில். ஒளரங்கசீப் காலத்திலேயே இதுவும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. பாபா ஷா முஸாபர் என்ற ஒரு முஸ்லீம் பெரியவரின் நினைவாக எழுப்பப்பட்ட புனிதக் கோயிலின் உள்ளே அமைக்கப் பட்டுள்ளது இது. ஒளரங்கசீபின் குரு இவர்தான் எனவும் சொல்லப் படுகின்றது. இந்தக் கோயிலின் நீர்நிலையில் இருந்து வடிகுழாய் மூலம் நீர் எடுத்துச் செல்லப்பட்டு அதன் மூலம் இந்த இயந்திரம் இயக்கப்பட்டிருக்கின்றது. ஏழை மக்களுக்காகவும், படை வீரர்களுக்காகவும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது இது.

No comments:

Post a Comment