Friday, September 19, 2008

சித்திரம் பேசுதடி!!! தேவகிரிக் கோட்டை!

பலமான சுற்றுச் சுவர்களுடன் கூடிய இந்தக் கோட்டை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு அரசர்களால் பல்வேறு விதமான ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரணத்தால் அந்த அரசர்களின் திறமைகளுக்கும், வலுவான அரசாட்சிக்கும் ஏற்ற வகையில் பலப் படுத்தப் பட்டிருக்கின்றது. வியக்க வைக்கும் கட்டிடக் கலையைக் கொண்டிருக்கும் இந்தக் கோட்டை பல பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. மொத்தக் கோட்டையிலும் தண்ணீர் நிரப்பும் தொட்டிகள், மேலே ஏறிச் செல்லப் படிகள் என்று காணப் படுகின்றன. மேலே ஏறிச் செல்லும் வழியில் படை வீரர்கள் நின்று கொள்ள இடமும், ஓய்வெடுக்கும் இடங்களும், மறைந்து கொள்ளும் இடங்களும் காணப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் நல்ல வெயில் காலம். சுட்டெரிக்கும் மே மாத வெயில். இந்த வெயிலில் தான் மேலே ஏறிச் செல்லவேண்டும். குன்று செங்குத்தாய் இருப்பதால் கொஞ்சம் கஷ்டம் தான் மேலே ஏறிச் செல்ல, அங்கங்கே சில படிகள், சில இடங்களில் சாய்வான நடைபாதைகள் மேலே செல்லவும் கீழே இறங்கவும் காண முடிகின்றது. பிரதான நுழைவாயிலில் இருந்து அடுத்த நுழைவாயில் அமைத்திருக்கும் கோணத்தால் உள்ளே நுழையும் எதிரிக்கு இன்னொரு வாயில் உள்ளே அமைந்திருப்பதைக் காண முடியாது. ஆனால் உள்ளே இருப்பவர் நுழைபவரைக் காண முடியும், தாக்கி அழிக்கவும் முடியும்.

யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டப் பட்டிருந்த கோயில் பின்னாட்களில் பல்வேறு கைகளிலும் மாறியதால் இன்று அங்கே பாரதமாதா கோயில் என்று மாற்றம் செய்யப் பட்டு, பாரதமாதா தரிசனம் கொடுக்கின்றாள். இதைத் தவிர, “ஆம்காஸ் மண்டபம்” மன்னர் பொது மக்களைத் தரிசிக்கும் இடம், ரங் மஹால், சினிமஹால், போன்றவை தவிர ஒரு இருட்டான பாதையும் காணப் படுகின்றது. இது தான் இந்தக் கோட்டையின் அதிசயமே. சுற்றிச் சுற்றி வந்து உள்ளே செல்லும் பல்வேறு முக்கிய வாயில்களைக் கடந்துக் கொஞ்சம் மேலே ஏறினால், ஒரு பரந்த வெளி வருகின்றது. அதன் இருபக்கமும் வீரர்கள் நிற்கும் இடம். அதைக் கடந்தால் திறந்த ஒரு முற்றம். மேலே பார்த்தால் சுற்றுச் சுவர்கள் தெரியும். திறந்த முற்றத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நுழைவாயிலுக்குள் நுழைந்தால் ஒரு பெரிய அறை போன்ற ஒரு இடம் வருகின்றது. அங்கே நுழையும் முன்னரே கையில் வைத்திருக்கும் அனைத்து வெளிச்சம் தரும் வஸ்துக்களையும் அணைக்கச் சொல்லி விடுகின்றனர். ஒரு தீவட்டியும், அதை ஏற்ற ஒரு நெருப்புப் பெட்டியும் வழிகாட்டி, (அரசால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டிகள் மட்டுமே) எடுத்து வருகின்றார். ஒரு குழு நுழைந்து உள்ளே சென்று பார்த்துவிட்டு, வேறு வாயில் வழியாக வெளியேறியதுமே மற்றொரு குழுவுக்கு அனுமதி.

உள்ளே சென்றால் கண்ணை மயக்கும் இருட்டு. எதிரே என்ன இருக்கின்றது? சுவரா? வெட்டவெளியா, மனிதரா?? என்ன என்றே புரியாதவண்ணம் மனதைக் குழப்பும் இருட்டு. நம் மனதையும் கண நேரம் அந்த இருட்டு மனதைக் குழப்புகின்றது. அதற்குள் வழிகாட்டி கையில் வைத்திருக்கும் தீவட்டியை ஏற்றி விடுகின்றார். கொஞ்சம் நிம்மதி. மற்றொரு பக்கமாய்த் தப்பித்துச் சென்று விடலாம் என்று இந்த இருட்டில் இருந்து தப்பிக்கும் ஒற்றர்களோ, வேற்று நாட்டு வீரர்களோ தப்பிக்க முடியாதபடிக்கு அங்கே சிறு இடத்திற்குச் செல்கின்றது. மேலே உயர்ந்த நீண்ட சுவர்கள். அதன் மேலே இருந்து எண்ணெய்க் கொப்பரை மூலமோ, அல்லது வேறு வகையிலோ நெருப்புக்களோ, கொதிக்கும் எண்ணெயோ ஊற்றப் பட்டால் வந்தவர் தப்பிக்கவே முடியாது. அப்படி ஒரு வகையில் கட்டப் பட்டிருக்கின்றது, நம் கட்டிடக் கலையில் சிறப்புக்கு ஒரு மாட்சிமை கொடுக்கின்றது. இதன் பின்னர் யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் ஜைனக் கோயிலாக இருந்த பாரதமாதா கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டுத் திரும்பும்போது “ஹாதி ஹவுஸ்” என்னும் இடத்தில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் இடத்தைப் பார்க்கலாம். சுற்றிலும் படிக்கட்டுகள் கீழே இறங்க அமைத்துள்ளது, அது அளவில் மிக மிகப் பெரியதாய் இருக்கின்றபடியால் இந்தப் பெயரில் அழைக்கப் படுகின்றது.
இவற்றைத் தவிர யாதவர்களால் கட்டி முடிக்கப் படாத சில குகைகளும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மலைக்கு மேலேயும் கட்டிடம் தெரிகின்றது. அரண்மனை தவிர, அங்கே தான் ஏகநாதரின் குருவான சாது ஜனார்தனரின் சமாதி இருப்பதாயும் சொல்லுகின்றார்கள். அங்கே மேலே ஏறும் பாதை பாதியிலேயே தடைபட்டு இருப்பதோடு அல்லாமல் ரொம்பவே செங்குத்தாயும் இருப்பதால் போக அனுமதி இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இன்னமும் இந்தக் கோட்டையில் தன் ஆராய்ச்சியையும், அகழாய்வையும் செய்து வருகின்றதாயும் சொல்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே இந்தக் கோட்டை இன்று உள்ளது. அடுத்து நாம் பார்க்கப் போவது மினி தாஜ்மஹால். ஒளரங்கசீபின் பிள்ளை தன் தாய்க்காகக் கட்டியது. கிட்டத் தட்ட தாஜ்மஹாலின் மாதிரி என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment