Monday, February 22, 2016

சுசீந்திரத்தில் தரிசனம்!

கன்யாகுமரியில் பகவதி அம்மன் தரிசனம் எளிதாகவே இருந்தது. ஏனெனில் அங்கே நுழைவுச் சீட்டு அனுமதி என்பதே இல்லை. கோயிலில் நுழையும்போதே கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டிருக்கின்றனர். ஆகவே நிம்மதியாகப் போய் நன்றாக பகவதியைத் தரிசனம் செய்யலாம். மக்களை அவரவர் பொறுப்பில் விட்டால் கொஞ்சம் கூடச் சுணக்கம் இல்லாமல் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி எனலாம். தரிசனம் முடிந்து முக்கடல் கூடும் சங்கமம் சென்று பார்த்தோம்.  அங்கேயும் முன்னர் இருந்தாற்போல் பார்க்க வசதியாக எல்லாம் இல்லை. கூட்டம் வேறு. :( பின்னர் எங்கள் வண்டி ஓட்டுநர் வரச் சொன்ன இடத்துக்குக் கிளம்பினோம். கிளம்பும்போது ஓர் கடையில் முந்திரிப்பருப்பு நன்றாக முழுதாக இருக்கவே வீட்டு உபயோகத்துக்குக் கால் கிலோ வாங்கிக் கொண்டோம். பின்னர் வண்டியில் ஏறிக் கொண்டு சுசீந்திரம் போகச் சொன்னோம்.

இதற்கு முன்னர் வந்தப்போவும் சுசீந்திரம் போனோம். என்றாலும் இப்போதும் போக விரும்பினோம். இந்தக் கோயிலும் சிறப்பு அனுமதி இல்லாக் கோயில். அநேகமாய்த் தென் தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் சிறப்பு அனுமதி இல்லாமல் பார்க்க முடிகிறது.  படங்கள் கிடைக்கவில்லை! :(  மடிக்கணினியை மீண்டும் நிறுவுகையில் எங்கேயோ போய் மாட்டிக் கொண்டிருக்கிறது போல! :) சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்திருப்பதாகச் சொல்லப்படும் கோயில்களில் ஒன்று.

இந்த சுசீந்திரம் புராண காலத்தில் ஞானாலயம் என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். இங்கே அத்திரி முனிவரும் அவர் மனைவி அநசுயாவும் தவம் செய்து வந்தனர். அநசுயா மிகப் பெயர் பெற்ற தபஸ்வினி என்பதோடு கற்புக்கரசியும் கூட. மும்மூர்த்திகளுக்கும் அவர்கள் மனைவியர் ஆன முப்பெரும் தேவியருக்கும் அவள் கற்பைச் சோதிக்கும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு சமயம் இமயமலையில் தவம் செய்ய வேண்டி அத்திரி முனிவர் மனைவியான அநசுயாவைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து மும்மூர்த்திகளும் துறவி வேடங்களில் வந்து அநசுயாவிடம் பிக்ஷை கேட்டனர். அநசுயாவும் ஆசிரமத்துக்குள் அழைத்து அவர்களுக்கு அதிதி உபசாரங்கள் செய்யத் தொடங்கினாள்.

உணவு படைக்கும் நேரம் மூவரும் முழு உடை அணிந்த ஒருவர் அளிக்கும் உணவை நாங்கள் ஏற்பதில்லை என்றும் ஆடை அணியாமல் உணவு படைத்தால் மட்டுமே ஏற்போம் என்றும் கூறினார்கள். முதலில் செய்வதறியாமல் திகைத்தாலும் அநசுயா சமாளித்துக் கொண்டு தன் தவ பலனாலும், கற்பின் பலனாலும் மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்தப் பச்சிளங்குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொஞ்சிப் பாலூட்டித் தாலாட்டித் தொட்டிலில் இட்டுச் சீராட்டினாள். தங்கள் கணவன்மார் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டதை அறிந்த முப்பெரும் தேவியரும் திகைத்துப் போயினர். அநசுயாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி அவளைச் சோதிக்கவே இம்மாதிரி நடந்து கொள்ள நேர்ந்தது என்பதைத் தெரிவிக்க அநசுயாவும் அவர்களை மீண்டும் பழைய உருவுக்கு மாற்றினாள். மூவரும் தங்கள் தங்கள் அம்சத்தில் அநசுயாவுக்கு ஒரு குழந்தை பிறப்பான் என்று அருளிச் செய்தனர். ஒரு சிலர் மூவரின் ஒன்று சேர்ந்த அம்சமாக தத்தாத்ரேயரை அநசுயாவுக்கு அளித்ததாகவும் சொல்கின்றனர்.

அத்திரி முனிவரும் திரும்பி வந்ததும், அநசுயா நடந்ததைச் சொல்ல அத்திரி முனிவர் மும்மூர்த்திகளையும் மனமார வேண்டி நின்றார். அவருடன் அநசுயாவும் பிரார்த்தனைகள் செய்ய மூவரும் அங்கே இருந்த கொன்றை மரத்தினடியில் காட்சி கொடுத்தனர்.  இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக இங்கே கோயில் கட்டப்பட்டது என்றும் மூவரும் சேர்ந்த ஒருவராக தாணுமாலயன் என்னும் பெயரில் ஈசன் காட்சி கொடுப்பதாகவும் ஐதீகம். சிவன்(தாணு) , மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா) என்று மூவரும் இங்கே ஓருருக் கொண்டு காட்சி அளிக்கின்றனர்.

Image result for தாணுமாலயன் திருக்கோவில்

நன்றி விக்கிபீடியா!


தொடரும்!

Friday, December 11, 2015

மறுபடி கன்யாகுமரிக்கு வாங்க! இங்கே இருந்து பார்க்கலாம்!

டிடியைத் தவிர வேறே யாரும் இங்கே வரலை. அதனால் பரவாயில்லை. நான் தொடர வேண்டியது தான் என நினைக்கிறேன். கொஞ்சம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். அதான் முடியமால் போகிறது. போகட்டும்!

கன்யாகுமரியைப் பத்திக் கடைசியா எழுதிட்டு இருந்தேன். இல்லையா? கன்யாகுமரியின் சில படங்களைப் போடுகிறேன் இங்கே. அங்கேயும் போட்டிருந்தாலும் இங்கேயும் பார்த்துக்கலாமே!ம்ம்ம்ம்! படங்களை ஆல்பத்திலேருந்து எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாப் போச்சு! அப்புறமா எப்படியோ ஒரு மாதிரியா எடுத்திருக்கேன். :)

முதல்முறை கன்யாகுமரி வந்தப்போ அங்கே கீழே தெரியும் மண்டபத்தில் இறங்கிப் பார்த்திருக்கோம். இப்போ அந்த வழி அடைக்கப்பட்டிருக்கிறது.


மண்டபத்திற்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள். இது சரியாகக் கோயிலில் அம்மன் குடியிருக்கும் இடத்துக்கு நேரே வரும். இங்கே ஒரு வாயில் உண்டு. இதன் வழியாகத் தான் அம்மனின் மூக்குத்தி ஒளிவிடுவதைப் பார்ப்பார்கள் எனச் சொல்வது உண்டு. இப்போது இந்த வாயில் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 



கோயிலின் கோபுரம் கொஞ்சம் தூரத்திலிருந்து! பக்கத்தில் தெரியும் மண்டபத்தின் வழியாகத் தான் நுழையணும்.

Sunday, November 29, 2015

இங்கே தொடரவா?

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகிறது இந்தப் பக்கத்துக்கு வந்து. சமையல் பதிவுகளையும், "எண்ணங்கள்" பக்கமே பகிர்வதால் இங்கே வரவே இல்லை. இனி கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்களை ஒதுக்கி வைக்கணும்னு எண்ணம். இப்படித் தான் கிறுக்குத் தனமா ஏதேனும் தோணும்!  சில சமயம் கணினியில் இருந்தே விலகி இருப்பேன். புத்தகங்கள் படித்துக் கொண்டு, தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டு என்று. நேற்றைய மின்வெட்டில் புத்தகங்களை அடுக்கலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ஒழுங்கு படுத்தினேன். அப்படி ஏதேனும் வேலையை ஏற்படுத்திக் கொள்ளணும். சும்மா உட்கார முடியாது! பல விஷயங்கள் ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது. எச்சில், பத்து பத்தி ஆரம்பிச்சேன். பாதியிலே இருக்கு! கல்யாணங்கள் குறித்த பதிவில் இன்னும் இரண்டோ, மூன்றோ போட்டால் முடிஞ்சிருக்கும்! அதுவும் சப்தபதியோட நிற்குது!

கொளஞ்சியப்பர் கோயில் பதிவும் பாதியிலே! கன்யாகுமரிப் பதிவும் பாதியிலே! இப்படி எல்லாமும் பாதியிலே நிறுத்திட்டு வேறே ஏதேனும் போடும்படியா ஆயிடுது! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்கள் பதிவுக்குப் போகாமல் இங்கேயே "என் பயணங்களில்" பக்கத்தில் அதை எல்லாம் நிறைவு செய்யலாமா என யோசனை! ஆரம்பத்திலிருந்தே பயணங்களை மட்டும் இங்கேயே எழுதி வந்திருக்கணும். இங்கே யாருமே வரதில்லைனு அங்கேயே எழுதப் போனால் நடு நடுவில் வேறே பதிவுகள் போடறாப்போல் ஆகிறது! :) இனி இங்கே சில நாட்களுக்கு எழுதலாம்னு எண்ணம். பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்குக் கணினியில் இருந்து விலகி நிற்கவும் விருப்பம். ஒரேயடியாக முடியாது தான். தனிப்பட்ட முறையில் வரும் மடல்களைப் பார்க்கவாவது வந்தாகணும். ஆனால் இந்தப் பதிவுகளை எழுதுவது, முகநூல் பக்கம், ஜி+ எல்லாத்தையும் ஓரம் கட்டலாம்னு நினைக்கிறேன்.  ஒரு மாதிரியான மனச்சோர்வு!  யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போன்றதொரு உணர்வு!

இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்க நினைக்கும் மனம்! வேறென்ன சொல்ல!

Sunday, August 25, 2013

அப்பா 3!

கணவன் வந்துவிட்டதை அறிந்து மாமியார், மாமனாருக்குக் காஃபி கொண்டு கொடுத்த கலா கணவனுக்கும், தனக்கும் காஃபி கலந்து கொண்டாள்.  தங்கள் அறைக்குச் செல்லக் கிளம்பினாள்.  இத்தனை நேரம் உள்ளே உட்கார்ந்திருந்த அவள் மாமியாரும், மாமனாரும், எப்படியோ ஊகித்தாற்போல் இப்போது ஹாலில் வந்து உட்கார்ந்திருந்தனர்.  அவள் செல்வதைப் பார்த்த மாமனார் கண்களால் ஜாடை காட்ட  அவள் மாமியாரோ, " ஆச்சு, இப்போ மந்திரம் ஓதியாகும். அவன் என்னிக்கோ வந்துண்டிருந்தான்.  இப்போத் தான் நிரந்தரமா இங்கே இருக்கப் போறான்.  அவனே பார்த்துக்கட்டும், இங்கே நடக்கிற அநியாயத்தை!  இவள் அடிக்கிற கொட்டத்தை நேர்லே பார்த்தாத் தான் புரியும் அவனுக்கும்." என்று சத்தமாகச் சொன்னாள்.  காதில் விழாதது போல் சென்றுவிட்டாள் கலா.

உள்ளே ராகவன் ஏதோ அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.  கதவு திறந்த சப்தம் கேட்டுத் தன் தாய் தான் வராளோ என நிமிர்ந்தவன், கலாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.  "வந்துட்டியா? எப்போ வந்தே?  வரச்சே கீழே விசாரிச்சேன்.  ஏதோ புது கேஸ் வந்திருக்குனு சொன்னாங்க.  யார் அது?  ஆணா, பெண்ணா? பிரசவ கேஸா?  இல்லை ஆர்டினரியா?" என்று கேள்விகளை அடுக்கினான்.

"முதல்லே காஃபியைப் பிடிங்க!" என்று அவன் கையில் காஃபியைக் கொடுத்த கலா, உரிமையோடு அவன் அருகில் உட்கார்ந்தாள்.  சற்று நேரம் பேசாமல் காஃபியை அருந்தியதும், அவள்,"இன்னிக்கு வந்த கேஸ் ஆண் தான்.  யார்னு தெரிஞ்சா ஆச்சரியப் படுவீங்க!" என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள். அவள் முகத்தைப் பார்த்து எதுவும் புரியாத ராகவன், "ம்ம்ம்ம்ம்ம், சாயந்திரமா வரேன்." என்றான்.  "குழந்தைங்க வந்துட்டாங்களா?" என்றும் விசாரித்தான்.  "வர நேரம் தான்!  இப்போ வந்துடுவாங்க. அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் பண்ணணும்." என்றவாறு எழுந்தாள் கலா. "ம்ம்ம்ம், அங்கே ஆஸ்பத்திரியிலும் நோயாளிகளோடு மன்னாடிட்டு, இங்கேயும் வந்து வேலை செய்யறியே!  உன் உடம்பையும் கவனிச்சுக்க வேண்டாமா?  உனக்கு ஏதானும் ஒண்ணுனா எனக்குத் தாங்க முடியாது.  ஒரு ஆளைப் போட்டுக்கறது தானே! நீ இல்லைனால் நாங்கல்லாம் என்ன செய்வோம்!" என்றான்.

அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்த கலா, "என் சிநேகிதியிடம் சொல்லி இருக்கேன். அனுப்பறதாச் சொல்லி இருக்கா!" என்றவள் கொஞ்சம் தயங்கினாள். "என்ன யோசனை?  அந்த ஆளை முடிச்சுடு! யோசிக்காதே!" என்றான் ராகவன்.  "இல்லை" என்று மீண்டும் கலா தயங்க, "அப்பா, அம்மாவுக்காக யோசிக்கிறாயா?" என்றான் ராகவன்.  நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கலா.  அந்த ஒரு பார்வையிலேயே அனைத்தும் புரிந்தது அவனுக்கு.  "யோசிக்காதே!  அந்த ஆள் வரட்டும். அவங்களையே நியமிச்சுடு.  நான் இனி இங்கே தான் இருக்கப்போறேன்.  அடுத்து மாற்றல் வந்தாலும் வேறே துறைக்கு மாறிடலாம்னு ஒரு எண்ணம். பார்ப்போம்.இல்லைனா, வேலையை விட்டுட்டு, உன்னோட ஆஸ்பத்திரி மேனேஜ்மென்டைப் பார்த்துண்டு உட்காரலாமானு இருக்கேன்." என்றான்.

"அப்பா, சாமி, அந்த வேலை மட்டும் வேண்டாம்.  அப்புறமா நான் இந்த வீட்டிலேயே இருக்க முடியாது!" என்றாள் கலா.  அதற்குள்ளாகக் குழந்தைகளின் கூக்குரல் கேட்க, அவங்க வந்துவிட்டது தெரிஞ்சு கலா மீதம் பேச்சு வார்த்தையை இரவில் வைச்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினாள்.  ராகவனுக்கும் கலாவுக்கும் ஒரு பெண், ஒரு ஆண் .  பெண் பெரியவள், பையன் சின்னவன்.  பெண் ஐந்தாம் வகுப்பிலும், பையன் முதல் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.  அன்று பள்ளியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருந்தது.  அதில் பங்கேற்கச் சென்ற கலாவின் பெண் அதில் பரிசு வாங்கி இருந்தாள்.  அந்த உற்சாகம் தான் இருவருக்கும்.  சந்தோஷத்தோடு பாட்டியிடம் அதைக் காட்டினாள் ஷோபா.  முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்ட பாட்டி, "என் மேலே பட்டுடாதே.  உன் அம்மாதான் ஆஸ்பத்திரித் தீட்டை எல்லாம் கொண்டு வரான்னா, நீயும் என் மேலே இடிச்சு, என்னை ராத்திரிச் சாப்பிட விடாமப்பண்ணிடாதே!" என்றாள்.

குழந்தை முகம் சுருங்கியது.
*********************************************************************************
சந்திரா வாயே திறக்கவில்லை.  அத்தனை குழம்பையும் கொட்டினான்.  நினைவாகத் தனக்குத் தேவையானதை எடுத்து வைத்துக்கொள்ள மறக்கவில்லை.  குழந்தைகள் வாய் திறவாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவன் கத்திக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.  அந்த வீட்டில் அவன் தான் தலைவன்.  குடும்பத் தலைவன்.  அவர்கள் அனைவருக்கும் அவன் தான் சோ'று போட்டுக் காப்பாற்றி வருகிறான். ஆகவே அவனுக்குத் தான் முதலிடம்.  அவனுக்குத் தெரியாமல் யாரும் எதுவும் பண்ண முடியாது.  அவனுக்குத் துரோகம் செய்வதாம் அது. வயிறு நிறையச் சாப்பிடவும் கூடாது. அவனாகப் பார்த்து இதைச் சாப்பிடுங்கனு சொன்னால் சாப்பிடணும்.  இல்லைனால் பார்த்துக் கொண்டே பேசாமல் இருக்கணும்.  சந்திராவும் குழந்தைகளும் அப்படியே பழகி விட்டனர். பண்டிகை, விசேஷ நாட்களில் குழந்தைகள் பாவம் என்று அக்கம்பக்கத்திலிருந்து ஏதேனும் தின்பண்டமோ, வேறு ஏதேனுமோ கொண்டு வந்து கொடுத்தால் அப்படியே திருப்பி விடுவான். ஒரு தரம் அவங்க வீட்டில் பண்டிகை இல்லை.  ஆடிப்பெருக்குச் செய்த கலந்த சாதங்களை ஒரு டிபன் காரியரில் போட்டுக் கூடவே ஒரு பாத்திரத்தில் அப்பளம், கறிவடாமும் எடுத்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமி வந்து கொடுத்துப் போனார்.  சந்திராவும் சகஜமாக வாங்கிக் கொண்டு விட்டாள்.

அவன் வந்ததும் சாப்பிட அமர்ந்தான்.  வீட்டுச் சாப்போடு இருந்த அந்தப் புதிய உணவு வகைகளைப் பார்த்தவன், "ஏது இது?" என்று உறுமினான்.  சந்திரா, பக்கத்துப் போர்ஷன் மாமி குழந்தைகளுக்குனு கொடுத்ததாகச் சொல்லவே, அந்த உணவு அப்படியே பாத்திரத்தோடு வீசி எறியப் பட்டது.  தன் போர்ஷனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாமிக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது.  அவனை வந்து ஏன் இப்படிப் பண்ணறீங்கனு கேட்டதுக்குக் கன்னாபின்னாவென்று பேசிவிட்டான்.  அதிலிருந்து அந்த மாமி சந்திராவிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை. இதெல்லாம் சந்திராவுக்குப் பழக்கம் ஆகிவிட்டது.  ஆனால் குழந்தைகள் என்ன செய்யும்?

அவன் சாப்பிட்டு விட்டு எழுந்ததும், குழந்தைகளைச் சாப்பிட அழைத்தாள் சந்திரா. ஒருத்தருக்கும் சாப்பிடணும்னு தோணலை.  ஆனால் சாப்பிடலைனு சொன்னாலும் அதுக்கும் திட்டுவான். வாயே திறக்காமல் மூவரும் வந்து அமர்ந்தனர். குழந்தைகளுக்கு மாவடுவைப் போட்டுவிட்டு சாதத்தைப் போட்டு ரசத்தை ஊற்றினாள்.  எங்கே!  குழம்பை எல்லாம் தான் கொட்டியாச்சே! காய் பண்ணினதில் அவள் எடுத்து வைக்கும் முன்னரே அவன் வந்துவிட்டான்.  ஆகவே அவன் சாப்பிட்டது போக மிச்சத்தை ராத்திரிக்கு வைத்துக் கொண்டு  அவன் சிநேகிதமாய் இருக்கும் எதிர் வீட்டிற்கு அவனே நேரில் கொண்டு கொடுத்தான்.  அந்த வீட்டம்மா, "உங்க குழந்தைங்களுக்கு வேண்டாமா?" னு கேட்டதுக்கு,
"ஒண்ணும் கேட்காதீங்கம்மா!" என்று ஜெயராமன் அழ ஆரம்பித்தான்.  அந்த அம்மா திகைத்துப் போனாள்.

Wednesday, August 21, 2013

அப்பா 2!

அந்த வீட்டில் இது எழுதப்படாத விதி.  முதலில் ஜெயராமன் தான் சாப்பிட வேண்டும்.  அதன் பின்னர் அவன் இரவுக்குத் தனக்குத் தேவையானவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வான்.  சாதம் மட்டும் இரவு சூடாக வடிக்க வேண்டும்.  ஆகவே மிகுந்தவைகளையே ஜெயராமனின் மனைவி, குழந்தைகள் சாப்பிடலாம். அதோடு வீட்டில் ஊறுகாய் போட்டிருந்தாலோ அல்லது மாவடு போட்டிருந்தாலோ குழம்பு ஜெயராமனுக்கு மட்டும் தான் வைக்க வேண்டும்.  மற்றவர் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டோ, மாவடு ஜலத்தை ஊற்றிக் கொண்டோ சாப்பிடலாம்.  இல்லை எனில் வெறும் ரசம் சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இந்த வீடு ஜெயராமன் சம்பாத்தியத்தில் நடக்கிறது.  அவன் தான் குடும்பத் தலைவன்.  அவனுக்குத் தான் முன்னுரிமை.  மீறி நடந்தால் மனைவி, குழந்தைகள் எனப் பார்க்காமல் வெளியேற்றிவிடுவான்.  இதுவரை சந்திரா அப்படி எத்தனையோ முறை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் பிறந்த வீட்டில் சென்று நிற்கையில் அவள் மனமும், உடலும் கூசும். ஒரு முறை அவள் பெரிய பிள்ளையையும் ஜெயராமன் இப்படி அடித்து விரட்ட அவன் பெரியப்பா வீட்டில் போய்த் தங்கினான்.  அது முதல் ஜெயராமன் அடித்துத் துரத்துவதும், அவர்கள் பெரியப்பா வீட்டில் போய்த் தங்குவதும் வழக்கமாகப் போய்விட்டது.  எதற்கு என்றெல்லாம் இல்லை;  சின்னக் காரணம் கிடைத்தால் போதும்.  இது வரையிலும் சசியைத் தான் துரத்தவில்லை.  பெண் என்ற ஒரே காரணம்.  இதோ இப்போது சாப்பிட அமர்ந்திருக்கிறான். வெண்கலப்பானையில் கரண்டியைப் போட்டு சாதம் எடுக்கையில் அந்தப் பாழாய்ப் போன குழம்புக் கிண்ணம் சத்தப் படுத்திக் காட்டிக் கொடுத்துவிட்டதே! என்ன நடக்கப் போகிறதோ! மெதுவாக அங்கிருந்து வெளியே செல்ல யத்தனித்த சந்திராவின் மேல் சூடாக எதுவோ வந்து விழக் கண்களும், மூக்கும் எரிச்சலாக எரிந்தன.  என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள்ளாக அங்கிருந்த ஒரு கம்பை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்த ஜெயராமன் அவள் தலைப்பின்னலைப் பிடித்துக் கொண்டு கம்பால் அடித்து நொறுக்கினான்.

"அப்படி என்ன, வாய்க்கு ருசியாகச் சாப்பிடணும்!  அதுவும் பொம்பளைக்கு!  ஏண்டி, நீ என்ன வெட்டி முறிக்கிறே இந்தக் குடும்பத்துக்கு!  வடிச்சுக் கொட்டின நேரம் போக மீதம் இருக்கும் நேரம் வெட்டியாத் தானே பொழுதைக் கழிக்கிறே!  அதுக்கு உனக்கு வெறும் சோறு போதாது? வித, விதமாக் குழம்பு, ரசம்னு சாப்பிடக் கேட்குதோ! இது எத்தனை நாளா நடக்கிறது!  எவ்வளவு புளி செலவு பண்ணி இருக்கே?  குழம்புப் பொடி உன் அப்பன் வீட்டுக் காசிலேயே பண்ணினது? சாம்பாரில் போட்டிருக்கும் காய்கள் எங்கிருந்து வந்தது?  என் காசிலே சாப்பிட்டுக் கொண்டு எனக்கா துரோகம் பண்ணறே?  இன்னிக்கு உன்னை ரெண்டிலே ஒண்ணு பார்த்துட்டுத் தாண்டி மறு வேலை!" அடிகள் அதிகமாக விழுந்தன.  எதற்கும் வாயே திறக்கவில்லை சந்திரா. வாயைத் திறந்தால் அடி தான் இன்னும் மோசமாகும்.  சொல்வது எதுவும் அவன் காதில் ஏறப் போவதில்லை.
*********************************************************************************

வந்திருந்த வெளி நோயாளிகளைக் கவனித்து முடித்த கலாவுக்கு அலுப்பாக இருந்தது.  அங்கிருந்த ஒரு அனுபவம் மிக்க நர்சிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவசர கேஸ் என்றால் மட்டுமே தன்னை அழைக்கும்படி சொல்லிவிட்டு அங்கேயே மாடிப் பக்கமாக இருந்த தன்னுடைய வீட்டிற்குச் செல்லப் படியேறினாள்.  மாடி வராந்தாவில் இருந்த கணவனுடைய செருப்புக்கள் அவன் வீட்டிற்கு வந்துவிட்டதை உறுதி செய்தன.  அவள் கணவன் மத்திய அரசு அதிகாரி. ஊருக்கு ஊர் மாறும் வேலை.  ஆகையால் அவள் மட்டும் மாமியார், மாமனார் குழந்தைகளுடன் இங்கே சொந்த வீடு கட்டிக் கொண்டு கீழே மருத்துவமனையும், மேலே வீடுமாக இருந்து வந்தனர்.  அவள் கணவன் அவ்வப்போது விடுமுறையில் வந்து செல்லுவான்.  இப்போது சில மாதங்களாகச் சென்னையிலேயே ஒரு அலுவலகத்திற்கு மாற்றம்.  அங்கேயே நிரந்தரமாகத் தங்கும்படியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இதே அலுவலகம் இல்லை எனினும் வேறு துறையில் இதே பதவிக்கான அலுவலகங்களில் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஊர், ஊராக மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுச் சுற்றியதில் அவனுக்கும் மனம் மிகுந்த அலுப்புடனும், வருத்தத்துடனும் இருக்கிறது.  அதிலும் கலா அவன் காதலித்து மணந்த மனைவி.


இருவரும் ஒரே குலம் தான்.  ஜாதகப் பொருத்தங்களும் பார்த்தார்கள் தான் என்றாலும் கலாவின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை.  ராகவனுக்கோக் கலாவை மிகவும் பிடித்து விட்டது.  ஆகவே தன் பெற்றோர், கலாவின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறிக் கலாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று செய்து கொண்டான்.  இப்போதும் ராகவனுடைய அப்பா, அம்மாவிற்குக் கலாவிடம் நிஷ்டூரம் தான் காட்டத் தெரியும். சேர்ந்து இருக்கிறார்களே தவிரத் தன் பெற்றோர் பற்றி ராகவன் நன்கறிவான்.  ஆனாலும் மருத்துவம் படித்த கலா அதைத் திறமையாகச் சமாளித்து வந்தாள். கூடியவரை என்றோ வரும் ராகவன் காதுகளுக்கு எந்த விஷயமும் போகாமல் பாதுகாத்து வந்தாள்.  இதை எல்லாம் எண்ணிப்பெருமூச்சு விட்டவாறு உள்ளே சென்ற கலாவுக்குத் தன்னைக் கண்டதுமே உள்ளே சென்று கதவைச் சாரத்திக் கொண்ட மாமியாரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

மங்களம்மாள் ஹாலில் தான் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.  கலா உள்ளே நுழைவதைக் கண்டதுமே உள்ளே சென்று இழுத்துப் போர்த்துக் கொண்டாள்.  பத்மநாப ஐயர் மனைவியைப் பார்த்து, "என்ன மஹாராணி வந்துட்டாளா?" என்று நக்கலாகக் கேட்க, பதில் பேசாமல் தலையை அசைத்தாள் மங்களம்.  "நீ பேசாமல் படு, சொல்கிறேன்.  அவளுக்கென்ன, கேஸ், கேஸ் அப்படினு நாக்கூசாமல் சொல்லிக் கொண்டு அங்கே வெறுமனே உட்கார்ந்துட்டுப் பொழுதைக் கழிக்கிறா.  பார்த்துக்கறதெல்லாம் நர்சுங்க.  இங்கே வந்ததும் வேலை செய்ய முடியாதாமா அவளுக்கு?  அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் அவளே செய்ஞ்சுக்கட்டும்.  நீ ஏன் போறே?"  என்றார்.

"இல்லை, ராகவன் வந்திருக்கான்.  அவன் ஏதேனும் நினைச்சுக்கப் போறானே!" என்றாள் மங்களம் மெல்ல.   "அவன் என்ன நினைச்சுக்கறது!  உனக்கு உடம்பு சரியில்லை;  வயசாச்சு; செய்ய முடியலைனா ராகவன் கோவிச்சுக்கப் போறானா என்ன! பேசாமல் படு! காஃபி வருதானு பார்ப்போம். நமக்கில்லைனாலும் ராகவனுக்காக அவள் பண்ணித் தானே ஆகணும்.  இல்லைன்னாலும் அவளுக்குப் போட்டுக்கணுமே!  என்ன தான் செய்யறானு பார்த்துடுவோம்!"

கதவு தட்டப்பட்டுப் பின் திறக்கப் பட்டது. கலா ஒரு தட்டில் இரண்டு காபி தம்ளர்களோடு வந்து அவற்றையும் இன்னொரு தட்டில் தின்பதற்கு ஏதுவாக முறுக்கு, தட்டை வகைகளும் வைத்து விட்டு நகர்ந்தாள்.

"ஏண்டிம்மா, ஒவ்வொண்ணாக் கொண்டு வரக் கூடாதோ! இப்படி ஹோட்டலில் கொடுக்கிறாப்போல எல்லாத்தையும் மொத்தமாக் கொண்டு வைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம்!  இல்லை என்ன அர்த்தம்ங்கறேன்!" மங்களம் நிஷ்டூரமாகக் கேட்க, பத்மநாபன், "அவள் கடமை முடிஞ்சது! ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்துச் செய்ய நாம் என்ன அவள் அப்பா, அம்மாவா? மாமியார், மாமனார் தானே!  அதான் ராகவன் வந்திருக்கானே!  இனி இங்கே தானே இருக்கப் போறான்!  எல்லாத்தையும் பார்த்துப் புரிஞ்சுக்கட்டுமே!" என்றார்.

கலா பதிலே பேசாமல் நகர்ந்தாள்.  குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.  அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் தயார் செய்யணும்.  அவளுக்கு வேலை இருந்தது.  இரவுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துட்டு., ஆறுமணிக்கப்புறமா கீழே போய் நோயாளிகளைப் பார்த்துட்டு வரணும்.  ராகவன் இங்கேயே வந்துட்டானானால் ஒரு சமையல்காரியைப் போட்டுடலாம்னு சொல்லி இருக்கான்.  அதைக் குறித்தும் முடிவு செய்யணும்.  வருகிற சமையல்காரங்க எல்லாம் மங்களத்தம்மாளின் மிரட்டல்களிலும், அதிகாரத்திலும் நிற்காமல், சொல்லிக் கொள்ளாமல் போயிடறாங்க.  இனி வருகிறவளாவது சரியாய் அமையணும்.

கலாவுக்கு ஆயிரம் கவலை இருந்தன. 

அப்பா! 1

மயக்கமாய்க் கிடந்தவரைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.கலா. ஒரு நிமிடம் அவளுக்குத் தான் ஒரு மருத்துவர் என்ற எண்ணமே வரவில்லை.  அவரை சோதித்துக் கொண்டிருந்த நர்ஸ் நிமிர்ந்து அவளைப்பார்த்து, பிபி ஏறி இருக்கு டாக்டர்!  ஷுகர் ரான்டம் செக் பண்ணினதிலேயே நிறைய இருக்கு. மாதிரி ரத்தம் சோதனைக்குக் கொடுத்திருக்கேன்.  அந்த ரிப்போர்ட் சாயந்திரம் தான் கிடைக்கும்."

சட்டெனச் சுதாரித்துக் கொண்டாள் கலா.  "இவரை அழைத்து வந்தது யார்?" எனக் கேட்டாள்.  நர்ஸ் வெளியே சென்று அழைக்க உள்ளே வந்தார் ஒருவர்.  அவரைப் பார்த்த கலா, "இவர் உங்களுக்கு என்ன உறவு?" எனக் கேட்டாள்.

இதற்குள்ளாக முழுமையாகச் சுயநிலைக்கு வந்துவிட்டாள் கலா.  ஆகவே அவள் குரல் பிசிறின்றித் தெளிவாக இருந்தது.  வந்தவர் அவளைப் பார்த்து, " பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர்.  இன்று காலையிலிருந்தே ஆள் வெளியே வரவே இல்லை.  அதான் உள்ளே சென்று பார்த்தப்போ மயங்கிக் கிடந்தது தெரிந்தது.  இங்கே கூட்டி வந்தேன்."  என்றார்.

"அப்படியா?  இந்தப் பகுதியைச் சேர்ந்தவரா?  எத்தனை நாட்களாகத் தெரியும் உங்களுக்கு?" என்று கேட்ட வண்ணமே தன் சோதனையைத் தொடர்ந்தாள் கலா.

"ஆறேழு மாதங்கள் முன்னால் வந்தார். இங்கே பக்கத்து வீட்டில் ஒரு போர்ஷனை எடுத்துக் கொண்டு குடி வந்தார்.  இவருக்கு வங்கிக்குப் போக வர, மற்றும் சில தேவையான சாமான்களை வாங்கித் தர என அழைப்பார்.  வயசானவர் ஆச்சே, துணைக்கும் யாரும் இல்லையே என உதவிகள் செய்வேன். அப்படித்தான் பழக்கம்." என்றார் வந்தவர்.

"சரி, இவருக்குச் சர்க்கரை நோயும் இருக்கு.  ரத்த அழுத்தமும் இருக்கு.  அதனால் மயங்கி இருக்கார். சாப்பாடும் சரியாகச் சாப்பிடலை போல.  நான் இங்கே இவரை அட்மிட் செய்து கொள்ளவா?" என்றாள் கலா.

தயங்கினார் வந்தவர்.  "என்ன செலவாகுமோ?  அவர் ஒத்துக்கணும்.  அவரைப் பார்த்தால் அவ்வளவு பணம் இருக்குமானு தெரியலையே!"  என்று வாய்விட்டுத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் கூறிக் கொண்டார். சிரித்தாள் கலா.  பின்னர்," இவர் வீட்டுச் சாவி உங்களிடம் தானே இருக்கு? அங்கே கொஞ்சம் தேடிப் பார்த்து இவர் உறவினர்களில் எவரேனும் ஒருத்தர் தொலைபேசி எண்ணோ, விலாசமோ கிடைக்கிறதா பாருங்கள்.  இவர் எனக்குத் தெரிந்தவரின் அப்பா போல் இருக்கிறது.  பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் நிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை.  ஆனாலும் நான் அட்மிட் செய்து கொள்கிறேன்.  நீங்கள் இவருடைய அறையில் தேடிப் பாருங்க. பணத்தைக்குறித்து இப்போதைக்குக் கவலை வேண்டாம்." என்றாள் கலா.  அவள் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.

வந்தவர் கிளம்பிச் செல்ல மணியை அடித்து ஆட்களை வரவழைத்த கலா, நர்ஸிடம்  "இந்தப் பெரியவரை ஒன்பதாம் எண் படுக்கையில் விடுங்க.  நர்ஸ், கேஸ் ஷீட் தயார் செய்து விடு. நான் இந்த பிரிஸ்க்ரிப்ஷனில் எழுதி இருக்காப்போல் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து விடு.  திட ஆகாரம் இப்போதைக்கு வேண்டாம்.  க்ளூகோஸ் ஏறட்டும்." என மடமடவென உத்தரவுகளைப் பிறப்பித்தாள் கலா.  அவள் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் மனதுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
*********************************************************************************
குழம்பைக் கீழே இறக்கினாள் சந்திரா.  ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  சட்டென ஒரு கிண்ணத்தை எடுத்துக் குழம்பால் நிரப்பினாள்.  அதை எங்கே வைப்பது?  சற்றே தடுமாறியவள் ஒரு தட்டைப் போட்டு மூடிவிட்டு அதைச் சாதம் வைத்திருக்கும் வெண்கலப் பானையிலேயே உள்ளே அழுத்தினாள்.  மேலே கொஞ்சம் சாதத்தைப் போட்டு மூடிவிட்டாள்.  தட்டுப்போட்டிருந்ததால் குழம்பு உள்ளே சிந்தாது.  சிந்தினாலும் அடி சாதத்தில் தான் இருக்கும்.  அதை அவள் எடுத்துக் கொள்வாள்.  குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்று பார்த்தாள்.  அவ்வளவு நேரம் அவளையே கவனித்துக்கொண்டிருந்த சசி சட்டெனப் புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள். அவளின் இரு சகோதரர்களும் குளிக்கச் சென்றிருந்தனர்.  அவர்கள் இருவரும் ஒரே பள்ளி.  சசி மட்டும் பெண்கள் பள்ளியில் படித்து வந்தாள்.  அதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கோ!  சந்திராவின் மனம் கலங்கியது.

வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.  அவன் வந்துவிட்டான்.  ஜெயராமன் தான்.  அவள் கணவன்.  இப்படி மரியாதை இல்லாமல் நினைக்கிறோமோ என சந்திராவுக்குள் குற்ற உணர்ச்சி தோன்றினாலும் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை.  வந்தவுடன் என்ன செய்தே? என்ன பண்ணினே?  எதை எடுத்தே?  எங்கே வைச்சே என ஆயிரம் கேள்விகள் கேட்பான். நம் வீடுதானே என்ற சுதந்திரம் கிடையாது.  ஒரு கடுகு தாளிப்பது என்றால் கூடக் கணக்கு ஒப்பிக்க வேண்டும். அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை நிரப்புவது அவன் தான்.  நிரப்பிய சாமான்கள் எத்தனை நாட்கள் வருகின்றன என்ற கணக்கும் வைத்திருப்பான். இதோ, இப்போ உள்ளே வந்தான் எனில் இதைக் கண்டு பிடித்தால்!! ஒரு பிரளயமே நடக்கும்.  அப்படி ஒண்ணும் கெட்ட பழக்கம் உள்ளவன் அல்ல.  எந்தவிதக் கெட்ட பழக்கங்களும் இல்லை.  வெற்றிலை, பாக்குக் கூடப் போடமாட்டான். ஆனால் அது எல்லாத்துக்கும் சேர்த்து வைத்துப்பெண் என்றாலே மட்டமாக நினைப்பவன்.  ஆண்களுக்குத் தொண்டு செய்வதற்கே பெண் பிறவி என நினைப்பவன்.

கல்யாணம் ஆகிச் சில மாதங்களுக்கே அவள் வாழ்க்கை இன்பமயமாக இருந்தது.  பின்னர் திடீரென மாறிவிட்டான். தினம் தினம் அடி, உதை தான்.  அவள் சாப்பிடுவதைக் கணக்குப் பண்ணுவான். பிறந்த வீட்டுக்குப் போ என விரட்டி விடுவான்.  மூன்று குழந்தைகள் எப்படிப் பிறந்தது நமக்கு எனப் பல சமயம் எண்ணிக் கொள்வாள் சந்திரா.  முதல் குழந்தை மட்டுமே விரும்பிப் பெற்றது.  இரண்டாவதான சசி பிறந்தப்போவே அவன் கொடுமை அதிகம் ஆகிவிட்டது.  பிள்ளைத் தாய்ச்சி என்று கூடப் பார்க்காமல் அடித்து இந்தக் குழந்தை என்னுடையதல்ல என்றெல்லாம் சொல்லி அவளை அவமானப் படுத்தினான்.  எப்படியோ பெண்ணைப் பெற்றுவிட்டோமே என்று  அவள் கவலைப்பட்டாலும் சசி அப்படியே நிறத்திலும், குணத்திலும் தந்தையைக் கொண்டிருந்தாள்.  குணம் நல்லபடியாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள் சந்திரா.  பெண்ணைப் பார்த்ததும் சில வருடங்களுக்கு அவள் மேல் அன்பு காட்டிய ஜெயராமனோ மூன்றாவதாகப் பிறந்த பிள்ளைக்குப் பின்னர் முற்றிலும் மாறிவிட்டான்.

பெண்ணாய்ப் பிறந்தது அவர்கள் குற்றமா?  ஆனாலும் ஜெயராமனுக்குத் தான் குடும்பத் தலைவன்.  தான் சம்பாதித்து இவர்களுக்குச் சோறு போடுகிறோம் என்ற எண்ணம் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.  அதைச் சொல்லிலும், செயலிலும் காட்டினான்.  ஒருநாள் சசி ரொம்பப் பசியா இருக்குனு சீக்கிரம் சாப்பிட உட்கார, ஜெயராமன் பேசிய பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாது.  அன்றிலிருந்து பசி பொறுக்கப் பழகிவிட்டாள் சசி.  என்றாலும் வளரும் குழந்தை அல்லவா?  பள்ளி வேறு தூரத்தில் இருக்கிறது.  அதற்குப் பேருந்தில் தான் செல்லணும்.  அதற்கான காசை அவனிடமிருந்து வாங்குவதற்குள் போதும், போதும்னு ஆகிடும். இன்னும் எத்தனை நாட்கள் இந்தக் கொடுமையோ என ஏங்கினாள் சந்திரா.

ஜெயராமன் வரும்போதே கத்திக் கொண்டு வந்தான். யார் மேல் கோபமோ, தெரியவில்லை.  உள்ளே வந்ததுமே சந்திராவிடம், "அங்கே என்னம்மா செய்துண்டிருக்கே?  சமைச்சு முடிச்சாச்சுன்னா இந்தப் பக்கம் வா னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்! உப்புப் பார்க்கிறேன், புளி பார்க்கிறேன், ருசி பார்க்கிறேன்னு நீ சாப்பிட்ட மிச்சத்தைச் சாப்பிடணும்னு எனக்குத் தலையெழுத்து இல்லை. " என்றான்.  சந்திரா நகர்ந்துவிட்டாள்.  உப்பில்லாமல் சமையல் இருந்தால் அதற்கும் அவளுக்கு அடி விழும்.  முன்னால் பார்த்தால் அதுவும் தப்பு.  என்றாவது மறக்காதா!  மனிதர்கள் தானே எல்லாருமே!  அதற்குள்ளாக ஜெயராமன் தட்டைப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்துவிட்டான்.  சந்திராவுக்குத் திக் திக் என்று இருந்தது.  கறியைத் தட்டில் போட்டுக் கொண்டவன் சாதம் எடுக்கக் கரண்டியை வெண்கலப் பானையில் விட்டான். "டங்"கென்று கரண்டி எதிலோ மோதியது.

Tuesday, December 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


தனது பக்தனுக்காகத் தாமே வந்து கடன் அடைத்துச் சென்றது சாக்ஷாத் அந்த ஸ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை புரிந்து கொண்ட தானீஷா, தான் மஹாபாபியாக இருந்து இறைவனே நேரில் வந்ததைத் தெரிந்து கொள்ளவில்லையே என நினைத்து நினைத்து ஏங்கினான்.  அங்கே சிறையில் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோபன்னா எழுந்து பார்த்தபோது விஷக்கிண்ணம் கவிழ்ந்து கிடப்பதையும் தானீஷா கையொப்பம் இட்டுக் கடன் தீர்ந்துவிட்டதாக அறிவித்த ரசீதையும் பார்த்தார்.  திகைத்தார்.  ஏதோ அதிசயம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். ராமன் திருவடியை அடைய முடியாமல் வந்து தடுத்துவிட்டானே என ஏங்கினார். ராமனைத் தாம் நிந்தித்ததால் இவ்வாறு செய்துவிட்டான் போலும் என எண்ணினார்.  அதனால் தான் விஷத்தைக் கொட்டி விட்டான் போலும் என எண்ணினார். அப்போது சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன.  தானீஷா பரிவாரங்களோடு அங்கே வந்து கொண்டிருந்தான்.  மறு விநாடிக் கதவு திறந்து தானீஷா எதிரே நின்றான்.  கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கோபன்னாவின் கர்ருணையால் அன்ன்று தாம் இறைவனையே கண்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  கோபன்னாவுக்கோ, ஸ்ரீராமனே நேரில் வந்தானா, தானீஷாவுக்குக் காட்சி கொடுத்தானா என எண்ணித் தமக்கு அந்தக் காட்சி கிட்டவில்லையே என ஏங்கினார்.  தானீஷாவோ அவர்கள் வந்ததையும், தம்முடன் பேசியதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  பிரசாதத்துக்கு ஆசைப் பட்டு கோபன்னாவிடம் பணி புரிவதாய்க் கூறினார்களே என  அதிசயித்தான்.  கோபன்னாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தானீஷாவைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, “நீர் செய்த பாக்கியம் தான் என்னே!  இறைவனைக் காணும் பேறு கிடைத்தது.  பனிரண்டு வருடமாய்க் கதறிக் கதறி அழைத்து இந்த நடுநிசியில் மூட்டை தூக்கி வந்து என் கடனை அடைத்துச் சென்றுவிட்டானா?  எனக்குக் காட்சி கிடைக்கவில்லையே! ஏ, ராமா, எனக்குக் காட்சி கொடுக்க மாட்டாயா?” எனக் கதறினார்.  தானீஷா, அவரிடம், நீர் சாதாரண கோபன்னா இல்லை;  ராமதாஸர்! ராமன் திருவடிக்கே தொண்டு பூண்ட பெரியவர். உம் அருமை தெரியாமல் நான் உம்மைத் துன்புறுத்தி மஹா பாவத்தைச் செய்து விட்டேன்.”  என்றான்.  எல்லையற்ற மன நிறைவோடு மீண்டும் பத்ராசலம் வந்தார் ராமதாஸரான கோபன்னா.  தானீஷா ராமனுடைய சேவைக்காக ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினான்.  நெடுநாட்கள் அதன் பின்னர் ராமனின் புகழைப் பாடி வந்தார் ராமதாஸர்.  ஒருநாள் பொன்மயமானதொரு தேர் விண்ணிலிருந்து இறங்கியது.  ராமதாஸர் வீட்டு வாசலில் நின்றது.  தன் மனைவியையும் அழைத்தார் ராமதாஸர்.  கைவேலையை முடித்துவிட்டு வருவதாய் அந்த அம்மாள் சொல்ல, “நீ கொடுத்து வைக்கவில்லை!” எனச் சொல்லிக் கொண்டே தேரின் மீது ராமதாஸர் ஏறிக் கொண்டு ராம நாம உபதேசத்தைக் கூறிக் கொண்டே தேரோடு விண்ணில் எழும்பிச் சென்றார். அவர் மனைவி உள்ளிருந்து வந்து பார்க்க, “நீ உன் மகனுக்குப் பணிசெய்யும் பொருட்டே உன்னைத் தங்க வைத்தோம்!” என அசரீரி வாக்குக் கேட்க அந்த அம்மாளும் தன் விதியை நினைந்தபடி தங்கிவிட்டார்.  பத்ராசல ராமதாஸர் ராமன் மேல் எண்ணற்ற பாடல்களைப் புனைந்து பாடினார்.  பாரதத் திருநாட்டில் ஹைதராபாத்திலே செல்வம் கொழித்திருப்பதன் காரணமும் பத்ராசல ராமதாஸருக்கு ராமன் அளித்த செல்வம் என்றே கூறப்படுகிறது.

பத்ராசலம் ராமதாஸர் கதை நிறைந்தது.